சென்னை: டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் ஆட்சியமைக்க தேவையான இடங்கள் அதிமுகவிடம் உள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறியுள்ளது. ஆகையால் பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில் அதிமுக 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும், அதன் முடிவுகளை பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
தீர்ப்பின் முழு விவரம்
* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும்.
* 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கக்கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு தானாக விலகுகிறது.
* பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற தடை நீக்கம்.
* ஆளுநர், சபாநாயகர் முடிவில் தலையிட முடியுமா என்பதை பார்த்து நீதிபதி தீர்ப்பு
* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.
* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தில் சபாநாயகர் உத்தரவு செல்லும், அவரது முடிவில் தவறில்லை.
* அரசு தலைமை கொறடா அளித்த உத்தரவின் அடிப்படையை ஆராய்ந்தே தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி அளித்த சாட்சியத்தையும் ஆராய்ந்துதான் தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவில் சட்டமீறல் இருப்பதாக தெரியவில்லை. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சரியானதுதான்.
* தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் அளித்த தீர்ப்பை சார்ந்து தீர்ப்பளிக்கவில்லை. நான் விசாரித்ததன் அடிப்படையில் தீர்ப்பு.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தகுதி நீக்கம் செல்லும் என்பதோடு, இடைத் தேர்தல் நடத்த தடை தளர்த்தப்பட்டுவிட்டது என்பதும் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி