திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மைசூர் மகாராஜா காணிக்கையாக வழங்கிய பல கோடி மதிப்புள்ள ரோஜா நிற வைரக்கல் காணாமல் போய்விட்டதாகவும், பிரசாதங்கள் தயார் செய்யக்கூடிய மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டப்பட்டு புதையல் எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்ஷீதலு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் ராஜ்யசபா எம்பி விஜய்சாய் ரெட்டி ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கண்டனம் தெரிவித்து இருவருக்கும் நோட்டீஸ் வழங்கியது.
இதற்கு இருவரிடமிருந்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருப்பதி 10வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர் தனஜெய் வர்மா கடந்த 8ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திருப்பதி ஏழுமலையான் குறித்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வந்த முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்ஷீதலு மற்றும் முன்னாள் எம்பி விஜய்சாய் ரெட்டி ஆகியோர் தலா ₹100 கோடி வழங்க வேண்டும் என மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 9ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இந்த வழக்கு வருகிற நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி