திருச்செந்தூர் : குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து கலந்துகொண்டதை சிறப்பிக்கும் வகையில் விருதுக்கான சான்றிதழ்கள் கோவில் நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவானது கடந்த 10ம் தேதி தொடங்கி 21ம் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர். மேலும் இந்த விழாவைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில் விழாவின்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் சார்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக விருதுக்கான சான்றிதழ்களை அந்த அமைப்பினர், கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கியுள்ளனர். கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி