காரியாபட்டி : காரியாபட்டி அருகே பாப்பனத்தில் உள்ள பாழடைந்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலில் தொல்லியல் துறையியனர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பாப்பணம் கிராமத்தில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட மாரவர்மபாண்டியன், குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வசித்த பாப்பணம் கிராமத்தில் மீனாட்சி கோயிலை கட்டினார். மீனாட்சியம்மனுக்கு இங்குதான் முதன் முதலில் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் மீனாட்சியம்மன் சன்னதிக்கு வடது புறத்தில் சிவபெருமான் சன்னதியும் உள்ளது.
கோயிலின் முன்பு வடகிழக்கு மூலையில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில்தான் சுற்று பகுதியில் உள்ள கிராமத்தினர் குடிக்க தண்ணீர் எடுத்துள்ளனர். காலப்போக்கில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மதுரைக்கு குடிபெயர்ந்தனர்.
அதன் பின்னர் உரிய பராமரிப்பில்லாததால், கோயில் பழுதடைந்தது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல தயங்கினர். தொடர்ந்து இங்கிருந்த தொன்மையான சிலைகள் திருடு போனது. இந்நிலையில் தொல்லியல் துறையினர் இந்த கோயிலில் மராமத்து பணிகள் செய்து சுற்றுச்சுவர் எடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த கோயிலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், 1966ம் வருடத்தின் புராதனச் சின்னங்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின்( 1966 எண் 25) கீழ் பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல்துறையினர் கோயில் வளாகத்தில் அறிவிப்பு பலகைகள் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி