×

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி வழக்கு: சிபிஐ டிஎஸ்பி தேவேந்திரகுமார் கைது

டெல்லி: இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரோஷி வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திரகுமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ டி.எஸ்.பி கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரோஷி வழக்கில், 5 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தால் தொழிலதிபர் சனா பாபுவை விடுவிப்பதாக, அதிகாரிகள் சார்பில் மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோர் பேரம் பேசியுள்ளனர். மொத்த தொகையான ரூ.5 கோடியில், முன்பணமாக 3 கோடி ரூபாயை 5  தவணைகளில் 2017 டிசம்பர் முதல் அக்டோபர் 2018 வரையிலும் கொடுத்துள்ளதாகவும், ஆதாரங்களை சனாபாபு சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

இதன் பின்னர், கடந்த மாதம் 25ம் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்திலிருந்து பாரிஸ் புறப்பட்ட சனாபாபு, விமான நிலையத்தில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது எஞ்சிய தொகையைான 2 கோடி ரூபாயை கொடுக்குமாறு குற்றம்சாட்டப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பேரம் பேசியதாக, டெல்லி சிபிஐ 3வது யூனிட்டின் எஸ்பி எஸ்.எஸ்.குரூம் என்பவரிடம், சனா பாபு கடந்த 15ம் தேதி புகார் கொடுத்துள்ளார். சனாபாபுவின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி சிபிஐ அமைப்பின் எஸ்ஐடி - டிஎஸ்பி தேவேந்திரகுமார், புரோக்கர் மனோஜ்  பிரசாத், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவின் உறவினர் சோமாஸ் பிரசாத் ஆகிய நான்கு பேர் மீது, ஐபிசி 120 பி, பிரிவு 7, 13 (2), 13 (1) (டி), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 1988 பிரிவு 7 ஏ, திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2018  ஆகிய பிரிவுகளில், எஸ்பி எஸ்.எஸ்.குரூம் வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் சிபிஐ டிஎஸ்பி தேவந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரோஷி தொடர்பான வழக்கில் முன்பு விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி தேவேந்திரகுமார், சிபிஐ தலைமை இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிராக இருக்கும் விதத்தில் சனாபாபுவின் வாக்குமூலத்தை மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிபிஐயின் தலைமை இயக்குனரான அலோக் வர்மா, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்குமிடையே முரண்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா  மீது லஞ்ச புகார் சுமத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே இவர்கள் இடையே உள்ள முரண்பாடு உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.  

இதற்கிடையே  சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறிய நிலையில்  இருவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meat exporter ,Moini Grosushi ,CBI ,DSP Devendrakumar , Meat Exporter, Moini Grosushi, Case: CBI DSP Devendrakumar, arrested
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...