வி.கே.புரம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 11வது நாளான இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசத்தில் இந்திரகால தீர்த்தக்கட்டத்தில் புனித நீராடினர்.வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. வாகனங்களில் வந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூமாக பாபநாசம் கோயிலுக்கு அருகில் இறக்கி விடப்பட்டனர்.
பாபநாசத்தில் இன்று எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. வாகனங்கள் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டாலும், பாபநாசத்தில் நடந்து செல்வதற்குக் கூட இடம் இல்லாத வகையில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாபநாசம் தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்.
தாமிரபரணியில் நீராடிய பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் பாபநாசம் சிவன்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அங்கு நடந்த துறவியர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டார்.
2 பேர் மீட்பு:
துணைமுதல்வர் ஓபிஎஸ் நீராடிக் கொண்டிருந்த போது அவர் அருகே 50 மீட்டர் தூரத்தில் நீராடிய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆண்களும், 2 பெண்களும் தண்ணீரில் இழுந்துச் செல்லப்பட்டனர். அப்போது ஓபிஎஸ்சின் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த வள்ளியூர் சரக உளவுப்பிரிவு எஸ்ஐ சுப்பிரமணியன் தண்ணீருக்குள் பாய்ந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி