×

செல்லூர் ராஜூ மட்டும் நன்றியோடு இருக்கிறார்: அமைச்சருக்கு டிடிவி.தினகரன் சர்டிபிகேட்

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும், இன்றும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார் என அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று இரவு 7.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அமைச்சர் காமராஜ் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக இன்னும் முழு விவரங்கள் வெளிவரவில்லை.  ஆனால், திருவாரூர் மாவட்ட மக்கள், அவ்வாறு சோதனை நடப்பதை பெரிதும் விரும்புகின்றனர். அதிமுகவில் விரைவில் பெண் தலைமை ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது, சரியானதுதான். மற்ற அமைச்சர்கள் நன்றியை மறந்து செயல்படுகின்றனர். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும், இன்றும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார் என தெரிகிறது.

அதே நேரத்தில் அவருக்கு ஒரு விளக்கத்தையும் நான் கொடுக்கிறேன். இப்போதும், அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில்தான் செயல்படுகிறது. அதை தெரிந்துதான், செல்லூர் ராஜூ அவ்வாறு கூறியிருப்பார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும். அதோடு, குற்றப் பின்னணி உள்ள, தவறுகள், ஊழல்கள் செய்கின்ற அனைத்து அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆட்சியை தூய்மைப்படுத்த வேண்டும். கட்சியையும், பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணம். அதுவே எங்களது உறுதியான நிலைப்பாடு. வைரமுத்து மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். குற்றம்சாட்டுபவர்கள், தகுந்த ஆதாரத்துடன் புகார் கூற வேண்டும். குற்றம் கூறுபவர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால், சட்ட ரீதியாக, முறையான நடவடிக்கையை எடுத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Seloor Raju ,minister ,TDV , Seloor Raju, Minister, TTV.Danagurnan, Certificate
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி