×

15 நாளில் திருமணம் நடக்க இருந்த புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை: நாகர்கோவில் அருகே சோகம்

பூதப்பாண்டி: நாகர்கோவில் அருகே இன்னும் 15 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் அருகே உள்ள எட்டாமடை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் ராமகிருஷ்ணன் (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டை சேர்ந்த உறவினர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

திருமண விழாவுக்கான அழைப்பிதழ்கள் நேற்று அச்சிடப்பட்டு வந்தன. பின்னர் இரவு ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அமர்ந்து திருமண அழைப்பிதழ்கள் கொடுப்பது, புதிய ஆடைகள் மற்றும் திருமண ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசித்தனர். அப்போது இன்று முதல் ராமகிருஷ்ணன் நேரடியாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க போவதாக கூறினார். இரவு சுமார் 9 மணியளவில் வழக்கம் போல் அனைவரும் உறங்க சென்றனர். ராமகிருஷ்ணனும் தனது அறைக்கு சென்றார். இன்று காலை 7.30 மணி ஆகியும் ராமகிருஷ்ணன் எழுந்திருக்கவில்லை. படுக்கை அறை உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கட்டிலில் ராமகிருஷ்ணன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே விஷ பாட்டிலும் இருந்தது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறினர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் வந்தனர். பின்னர் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ராமகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அவர் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? அல்லது போனில் யாருக்காவது தகவல் தெரிவித்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து ராமகிருஷ்ணனின் உறவினர்கள் கூறுகையில், ராமகிருஷ்ணனின் தாயார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். அவர் இருக்கும் போதே இந்த பெண்ணை தான்  திருமணம் செய்ய வேண்டும் என பேசி முடிவெடுக்கப்பட்டு இருந்தது. ராமகிருஷ்ணனும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். பெண்ணிடமும் அடிக்கடி பேசி வந்தார். அவரின் விருப்பபடியே திருமண ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் திடீரென தற்கொலை செய்தது அதிர்ச்சியை அளிக்கிறது என்றனர். இந்த சம்பவம் குறித்து  ராமகிருஷ்ணனின் தந்தை ஜோசப் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : groom ,suicide ,Nagercoil , Marriage, new groom, poison, suicide, nagarcoil, tragedy
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...