×

நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை

சென்னை: நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 2024-25ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை தேசிய தேர்வுகள் முகமை வழங்கி உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு: நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லும் வகையில் திட்டமிட வேண்டும். தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வரவேண்டும்.

அதன்பிறகு, வரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
தேர்வு மையங்களுக்குள் பேப்பர் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள் பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தேர்வு தொடங்கி முதல் ஒரு மணிநேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாச்சார, மதம் சார்ந்த ஆடை உடுத்தி வருவோர், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது.

தேர்வு முடியும் முன்பே விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வர கூடாது. தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

* இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் 12,730 மாணவர்கள் எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசின் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மூலம் 12 ஆயிரத்து 730 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளை தயார்படுத்துவதற்கு ஏதுவாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு நடத்துகிறது.

அந்த வகையில், நடப்பாண்டும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வந்தன. பின்னர் பொதுத் தேர்வையொட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தன. பொதுத் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தன.

இந்த ஆண்டு நீட் தேர்வை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 12 ஆயிரத்து 730 பேர் எழுத இருக்கின்றனர். இவர்களின் ஆண்கள் 3,647, பெண்கள் 9,094 ஆவர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 992 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் இந்த நீட் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

The post நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,NEET ,MPBS ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம்...