சென்னை: கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஸ்தபதி முத்தையா ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உத்தரவிட்டது. உத்தரவையடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்த ஸ்தபதி முத்தையாவிடம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ல் கும்பாபிஷேம் நடந்தது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புன்னைவனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி அதை மாற்ற முடிவு செய்து, இரவோடு, இரவாக சிலைகளை மாற்றியதாக கூறப்பட்டது. சிலைகளை கோயிலில் இருந்து கடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முதற்கட்டமாக ஆகஸ்ட் 13ம் தேதி 50க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்களிடமும், ஆகஸ்ட் 14ம் தேதி இணை ஆணையர் காவேரியிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிலை மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று மாலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அவர் கோயிலில் புன்னை வனநாதர் சன்னதியில் திடீரென ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கோயில் இணை ஆணையர் காவேரி, கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புன்னை வனநாதர் சன்னதியில் மயில் வாயில் பூ சிவனை பூஜை செய்வது போன்று அல்லாமல் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று அமைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், 3 சிலைகளையும் திடீரென மாற்றியது ஏன், அந்த சிலைகள் மாற்றப்பட்டதற்கான ஆதாரம் எங்கே, தற்போது அந்த சிலைகள் எங்கு இருக்கிறது, சிலை புதைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினார்.
அப்போது, கூடுதல் ஆணையர் திருமகள் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேலாக அவர் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து, மேலும் திருமகளிடம் சிலை மாற்றியது தொடர்பாக ஆவணங்கள் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடுதல் ஆணையர் திருமகளிடம் இன்று மீண்டும் விசாரைணை நடைபெற்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி