செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (45), விவசாயி. இவரது மனைவி சாரதாவின் தம்பி சவுந்தர் (40). இவர் கடந்தாண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் சவுந்தர் மனைவி வெண்ணிலா (35) விதவை சான்று பெற செங்கம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததாக தெரிகிறது. இருப்பினும் சான்று பெற முடியவில்லை. தாசில்தார் ரேணுகாவிடம் கோப்பு நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. அப்போது, வெண்ணிலாவிற்கு விதவை சான்று வழங்க தாசில்தாரிடம் கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அதற்கு, அவர் ரூ2 ஆயிரம் கொடுத்தால் உடனே சான்று கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சரவணகுமாரிடம் புகார் அளித்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரூ.2 ஆயிரம் நோட்டை நேற்று மதியம் செங்கம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ரேணுகாவிடம் கோபாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பின் தாசில்தார் ரேணுகாவை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். இச்சம்பவம் செங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி