திருவனந்தபுரம்: அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பேசியதால் பதவியை ராஜினாமா செய்த சஜி செரியான் நேற்று மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். கேரளாவில் பினராய் விஜயன் மந்திரிசபையில் மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். கடந்த 6 மாதங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் இவர் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சஜி செரியான் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த திருவல்லா போலீஸ், சஜி செரியான் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பேசவில்லை என்று கூறி வழக்கை முடித்தது.இந்நிலையில் சஜி செரியானுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானும் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பின்னர் பதவி பிரமாணத்திற்கு நிபந்தனையுடன் அவர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சஜி செரியான் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் ஷம்சீர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை….
The post சஜி செரியான் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பு appeared first on Dinakaran.