×

கரி தயாரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு

*கலெக்டர் நடவடிக்கை வேண்டும்*8 கிராம மக்கள் வலியுறுத்தல்குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே தேங்காய் சிரட்டையில் இருந்து ‘கரி’ தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் புகையால், 8 கிராமங்களில் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே தேங்காய் சிரட்டை கரி தயாரிப்புக்கு தடை விதித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோயில் பகுதியில் கொப்பரை தேங்காய் களங்கள் அதிகளவில் உள்ளன. கொப்பரை தேங்காயில் இருந்து தேங்காய் பருப்பு பிரித்து எடுக்கப்பட்ட பின், தேங்காய் சிரட்டை மீதமாகிறது. இந்த தேங்காய் சிரட்டைகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி லாரிகளில் ஏற்றிக் கொண்டு, பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சித்திரப்பள்ளியில் இருந்து விராலிபட்டி செல்லும் வழியில் கன்னிமார் கோயில் அருகே தனிநபர் சிலர் காட்டுப்பகுதியில் வெட்ட வெளியில் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி தயாரிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாளையம் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் இயந்தி வந்த தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் ஆலைகள், தென்மண்டல பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவு மூலம் தடை செய்யப்பட்டு விட்டது. இந்த ஆலை உரிமையாளர்கள் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் பேரூராட்சி ஊரகப் பகுதிகளை குறிவைத்து சித்திரப்பள்ளி- விராலிபட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மாத வாடகைக்கு எடுத்து மக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி தயாரிக்கும் ஆலைகளை முறைகேடாக இயக்கி வருகின்றனர்.தேங்காய் சிரட்டையை எரித்து அதிலிருந்து கிடைக்கும் கரியை பயன்படுத்தி ‘ஆக்டிவேட்டட் கார்பன்’ என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டைகளை, கெமிக்கலுடன் சேர்த்து எரித்து கரி தயாரிக்கப்படுதால் ஏற்படும் புகைமூட்டம், சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கிறது. குழி தோண்டி, அதில் தேங்காய் சிரட்டைகளை போட்டு மூடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இத்தகைய கரி தயாரிக்கும் பணியால் சுற்றுப்பகுதி நிலங்களில் சாம்பல், கரித்தூள் படிந்து ஆடு, மாடுகளுக்கு தீவனம் கூட கிடைப்பதில்லை. எரிக்கப்பட்ட தேங்காய் சிரட்டையில் இருந்து கரியை வெளியேஎடுக்க அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுவதால், கரித்தூள் கலந்த தண்ணீர் நிலத்துக்குள் செல்கிறது. அதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கூட தண்ணீர் மாசுபட்டுள்ளது. மேலும் இத்தகைய கரி தயாரிக்கும் பணி காரணமாக ஏற்படும் புகையால், சித்திரப்பள்ளி, விராலிபட்டி, கூட்டக்காரன்பட்டி, பாப்பாநாயக்கனூர், மஞ்சாநாயக்கனூர், சேவகவுண்ச்சிபட்டி, உரல்உருட்டுபட்டி, நாயக்கனூர் ஆகிய 8 கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுச்சுழலை மாசுப்படுத்தி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படும் தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் ஆலைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்தும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஆலைகள் இயங்காத வகையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

The post கரி தயாரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gujiliyambara ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்