×

அவமானங்களைக் கடந்து, வறுமையில் சாதித்து பட்டம் பெற்ற பெண் வக்கீலுக்கு மேளதாளம் முழங்க குதிரையில் அழைத்து வந்து வரவேற்பு-மதுரை மேலவாசல் பகுதி மக்கள் கொண்டாட்டம்

மதுரை : மதுரை மேலவாசல் பகுதியில் முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற பெண்ணுக்கு மேளதாளம் முழங்க குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்து அப்பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.மதுரை மாநகரின் மைய பகுதியில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது மேலவாசல். இப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் – சுந்தரி தம்பதியினரின் இளையமகள் துர்கா. அப்பகுதியில் ஆரம்பக் கல்வியும், அதனைத்தொடர்ந்து, மாநகராட்சியின் ஈ.வெ.ரா மகளிர் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.மிகவும் துடிப்பான பெண்ணான இவர், வழக்கறிஞராக வேண்டும் என முடிவு செய்து, தந்தை இறந்த நிலையிலும், தாய் கொடுத்த ஊக்கத்தில், இதற்காக பயிற்சி எடுத்துள்ளார். பின்பு நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் 4 ஆண்டுகளும், கடந்தாண்டு திருச்சி சட்டக்கல்லூரியில் 5ம் ஆண்டும் படித்து சட்ட கல்லூரி தேர்வில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் வழக்கறிஞருக்கான சான்றிதழை முறையாக கடந்த வாரம் சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்தார். இதன் மூலம் இவர் இந்த பகுதியில் முதல் பெண் வழக்கறிஞராகியுள்ளார்.சென்னையிலிருந்து ரயில் மூலமாக நேற்று மதுரை வந்த வழக்கறிஞர் துர்காவிற்கு மதுரையில் மேலவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்கவும், சால்வை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். பின், ரயில் நிலையம் பகுதியில் இருந்து வழக்கறிஞர் துர்காவை குதிரையில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேலும், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மேலவாசல் பகுதிக்கு சென்ற வழக்கறிஞர் துர்காவை பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.வழக்கறிஞர் துர்கா கூறும்போது, ‘‘மேலவாசல் பகுதியில் பெண்கள் யாரும் சட்டப் படிப்பு முடித்தது இல்லை. இப்பகுதி குழந்தைகள் நன்றாக படித்தால் மேலவாசல் பகுதியில் இருந்து கொண்டு எப்படி இதுபோன்று படிக்கிறீர்கள் என எங்களை அவமானப்படுத்தி பேசுவார்கள். இதனையும் கடந்து தற்போது முதல் ஆளாக எனது பகுதியில் வழக்கறிஞராக படித்து பார் கவுன்சிலில் பதிவு பெற்றுள்ளேன். மேலவாசல் பகுதி இளையோர் கல்வி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வேன். சட்டம் குறித்து பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவுள்ளேன்’’ என்றார்….

The post அவமானங்களைக் கடந்து, வறுமையில் சாதித்து பட்டம் பெற்ற பெண் வக்கீலுக்கு மேளதாளம் முழங்க குதிரையில் அழைத்து வந்து வரவேற்பு-மதுரை மேலவாசல் பகுதி மக்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Melavasal ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை