மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு போலி பாஸ்போர்ட் மூலமாக செல்ல முயன்ற 2 பெண்களை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்று இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு அல்லையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.அப்போது சென்னை முகவரி கொண்ட, இந்திய பாஸ்போர்ட்டுடன் கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற 2 பெண்கள் சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணம் செல்வதற்கு வந்திருந்தனர். அவர்களின்மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டர் மூலமாக ஆய்வு செய்ததில், அவை இரண்டும் போலி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களின் பயணத்தை ரத்து செய்து, இருவரையும் தனியறையில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், இந்த 2 பெண்களும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து, இங்கேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதனால் அவர்கள் ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து, போலியான இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் சென்னையில் இருந்து சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முயற்சித்திருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அந்த 2 பெண்களுக்கும் போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த ஏஜெண்டுகள் யார், இப்பெண்கள் எங்கு தங்கியிருந்தனர் என குடியுரிமை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். 2 பெண்களையும் கைது செய்து, மேல்நடவடிக்கைகக்காக இன்று அதிகாலை சென்னை குற்றப்பிரிவு போலீசில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.
