×

சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு தினமும் 1 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது: உற்பத்தி அதிகரிப்பால் விலை மேலும் சரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு  வெளிமாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்  விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.   இதில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வெயிலின் தாக்கத்தின்போது, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செவ்விளநீர் விற்பனையே அதிகமாக இருந்துள்ளது. பின், கோடை மழைக்கு பிறகு, ஜூன் மூதல் ஆகஸ்ட் மாதம் வரை என தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் அந்நேரத்தில் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதன்பின் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மழை குறைவால், மீண்டும் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.  இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. மேலும், இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையால், பொள்ளாச்சி பகுதியிலிருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது.இருப்பினும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் இளநீர் உற்பத்தி உற்பத்தி அதிகரிப்பால், வெளி மாநிலங்களுக்கு குறைவான விலைக்கு அதிகளவு அனுப்பப்பட்டன. கடந்த சிலநாட்களாக டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பணி காரணமாக அம்மாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைவாக இருந்தாலும், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை குறைந்து சகஜநிலைக்கு திரும்ப துவங்கியுள்ளதால், பொள்ளாச்சியிலிருந்து மீண்டும், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனரக வாகனங்களில் இளநீர் அனுப்பும் பணி துவங்கப்பட்டுள்ளது.  இருப்பினும், பனிப்பொழிவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இளநீர் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, அதன் தேக்கத்தை தவிர்க்க, கடந்த மாதம் ரூ.18ஆக இருந்த பண்ணை மொத்த விலை தற்போது, ரூ.16ஆக சரிந்துள்ளது. இதற்கிடையே, சபரிமலை சீசன் என்பதால், கேரளாவில் இளநீருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதிலும், பொள்ளாச்சி பகுதியிலிருந்து கொண்டுசெல்லப்படும் இளநீரை, பல்வேறு பகுதியிலிருந்து வருவோர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சிலவாரமாக கேரளாவுக்கு, வழக்கத்தைவிட கூடுதலாக இளநீர் அனுப்பப்படுகிறது.  அதிலும், கேரளாவுக்கு  நாள் ஒன்றுக்கு 1லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் விரையிலான இளநீரே அனுப்பப்பட்டது. இந்த ஆண்டில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், குறைவான விலைக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி மாதம் வரை இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், அதன் விலை சரிவு ஏற்படும் என்றும், இளநீர் தேக்கத்தை தவிர்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரமாக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு தினமும் 1 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது: உற்பத்தி அதிகரிப்பால் விலை மேலும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Sabarimala ,Pollachi ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...