×

உயிரைப் பறித்தது செல்பி மோகம் சென்னை சகோதரர்கள் உட்பட 3 பேர் வரதமாநதி அணையில் மூழ்கி சாவு: பழநிக்கு சுற்றுலா வந்தபோது சோகம்

பழநி:  பழநி அருகே வரதமாநதி அணையில் செல்பி எடுக்க முயன்ற சென்னையை சேர்ந்த சகோதரர்கள் உள்பட 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது சகோதரர் யோகேஷ் (23). பி.காம் பட்டதாரிகள். இருவரும், உறவினர்களான புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த கணேஷ் (21), சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த ஹரீஷ் (23) ஆகியோருடன் கோவை மற்றும் பழநிக்கு சுற்றுலா கிளம்பினர். நேற்று முன்தினம் ரயில் மூலம் கோவை வந்தனர். அங்குள்ள ஈஷா யோகா மையம் மற்றும் மருதமலை முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுனர்.கோவையில் இருந்து நேற்று பிற்பகல் பழநிக்கு வந்தனர். கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணைக்கு சென்றுள்ளனர். தொடர்மழையின் காரணமாக வரதமாநதி அணை தற்போது நிரம்பி இருக்கிறது. அணையின் மேல்பகுதிக்கு சென்ற 4 பேரும் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கணேஷ் தண்ணீருக்குள் மூழ்கத் துவங்கினார். இவரைக் காப்பாற்றச் சென்ற விக்னேஷ் மற்றும் யோகேஷ் ஆகியோரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதில் அதிர்ச்சியடைந்த ஹரீஷ் கூச்சலிட்டுள்ளார். அவரின் கூச்சலைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் மூவரும் மூழ்கி விட்டனர். உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் போலீசார் விரைந்தனர். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மூவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உயிர் தப்பிய ஹரீஷிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அணையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post உயிரைப் பறித்தது செல்பி மோகம் சென்னை சகோதரர்கள் உட்பட 3 பேர் வரதமாநதி அணையில் மூழ்கி சாவு: பழநிக்கு சுற்றுலா வந்தபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Varadamanadi dam ,Palanik ,Palani ,Chennai ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை