சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை திரும்ப பெறுவதாக அமமுக அறிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர் உள்ளிட்ட 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.