
கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தேஜூ அஸ்வினி. அதனை தொடர்ந்து ‘பிளாக் மெயில்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களிலும் ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்தார். தற்போது விதார்த், கலையரசன் நடித்து நேற்று வெளியான ‘மூன்றாம் கண்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த தேஜு அஸ்வினி தான் நடிகையாக மாறியது எப்படி என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘நான் பிவிஆர் நிறுவனத்தில் சேல்ஸ் பெண்ணாக பணியாற்றி கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சில புதிய பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. அதனால், ஏன் இந்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக முயற்சி செய்து நடிப்பில் கவனம் செலுத்த கூடாது என எனக்கு தோன்றியது. அதன் பின்னர் வேலையை விட்டு விலகினேன். அப்போது எதிர்பாராத விதமாக கொரோனா பெருந்தொற்றால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனக்கு ஆரம்பத்திலிருந்து மீடியா துறையில் அதிக ஆர்வம் இருந்தது.
அந்த ஆர்வம் தான் அந்த கடினமான காலகட்டத்திலும் எனக்கு துணையாக இருந்தது. அப்போது நாங்கள் யூடியூபில் ‘லாக்டவுன்’ என்ற தொடரை உருவாக்கினோம். அந்த தொடர் தான் என்னை நடிகையாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது’ என்று தெரிவித்துள்ளார்.

