சென்னை: ‘அழியாத கோலங்கள் 2’, ‘ட்ரீம் கேர்ள்’ படங்களை இயக்கிய எம்.ஆர்.பாரதி, அடுத்து இயக்கும் படம் ‘சைக்கிள் கேப்’. படம் குறித்து அவர் கூறியது: ‘சைக்கிள் கேப்’பில் நடந்துபோச்சு என பலரும் சொல்வார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பதால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் இது. முழுநீள காதல் கதைதான். ஊட்டியில் படமாக்கினேன். 20 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். புதுமுகங்கள் நவாஸ், செரி ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். பிரபு சாஸ்தா, இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். லயோலா கல்லூரி விஸ்காம் மாணவர்கள் 5 பேர் உதவி இயக்குனர்களாக இதில் பணியாற்றியதுடன் முக்கிய வேடங்களிலும் அவர்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் நாராயணமூர்த்தி பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். 9ம் வகுப்பு படிக்கும்போது ஹீரோ, ஹீரோயின் காதலிக்கும் காட்சிகளுக்காக ஊட்டி பள்ளியிலேயே படிக்கும் மாணவன், மாணவியை தேர்வு செய்தேன். நவாஸ் ஹீரோவாக நடிப்பதுடன் டியூப்லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தும் உள்ளார். ஜூன் இறுதியில் படம் திரைக்கு வரும்.

