ஒன்றிய அமைச்சர் ஆஷா சரத்துக்கு சிறுநீரகங்கள் பழுதடைந்ததால் உயிருக்கு போராடுகிறார். அவரது அரியவகை ரத்தம், கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் சசிகுமாருடன் பொருந்துகிறது. இந்நிலையில் அவரது மனைவி சைத்ரா ஆச்சாரின் ஒரு சிறுநீரகம் திருடப்பட்ட விஷயம் தெரியவருகிறது. இதனால் கொதிக்கும் சசிகுமார் என்ன செய்தார் என்பது மீதி கதை.
சசிகுமாரின் சாமானியனான அவரது கேரக்டரின் மூலம் சமூக சீர்கேடுகளை நெற்றிப்பொட்டில் அறைந்து சொன்ன இயக்குனர் ராஜூ முருகனுக்கு பாராட்டு. நல்லவராக, மனைவியை நேசிப்பவராக, அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுப்பவராக, தன்னையே தனக்குள் உணர்பவராக, சசிகுமாரின் இயல்பான நடிப்புக்கு விருது நிச்சயம். கோவில்பட்டி சுசீலாவாகவே மாறிவிட்ட சைத்ரா ஆச்சார், கனமான வேடத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் ஆஷா சரத், படுத்த படுக்கையிலேயே அதிகாரத்தின் உச்சத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தியுள்ளார். ‘மக்கள் குத்து’ நிருபர் குரு சோமசுந்தரம், அசத்தல். புரோக்கர் அருள் எழிலன், நீதிபதி ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக வரும் இயக்குனர் கோபி நயினார், கந்துவட்டி ஆசாமி வசுமித்ர, தாத்தா உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
கோவில்பட்டியும், கோர்ட்டும் நீரவ் ஷா ஒளிப்பதிவில் வேறு வண்ணம் பூசி, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசையில் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார். வசனங்கள் சாட்டையாக மாறி, சமூக அவலங்களை விளாசியது சிறப்பு. இயக்குனர் ராஜூ முருகனின் முத்திரை ஆங்காங்கே தெரிகிறது.
