பெங்களூரு: வெங்கட் பிரபு இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் சுதீப் நடிக்கிறார். தமிழில் மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, இப்போது நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை முடித்ததும் சுதீப் நடிக்கும் பான் இந்தியா படத்தை வெங்கட் பிரபு இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது.
சுதீப் கூறும்போது, ‘நான் விரும்பும் கேரக்டர்கள் எனக்கு கன்னட சினிமா மூலமும் பிற தென்னிந்திய படங்கள் மூலமும் கிடைக்கிறது. ஆனால் பாலிவுட்டில் வில்லனாக நடிக்க மட்டுமே அழைக்கிறார்கள். அதில் எனக்கு சவாலாக அமையும் வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். மங்காத்தா, மாநாடு என பெரிய வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபு கதை சொல்லியிருக்கிறார். அவரது படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.