×

கைது செய்தாலும் பயப்பட மாட்டேன்: பவன் கல்யாண் ஆவேசம்

திருமலை: ஆந்திராவில் பாஜவின் ‘பி’ டீமாக நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நேற்று முன்தினம் நடிகர் பவன் கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜவிடம் பணம் பெற்றுக்கொண்டு பி டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். இதனிடையே நேற்றிரவு முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை, பவன் கல்யாண் அவசரமாக சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பவன்கல்யாண் கூறுகையில், ‘எனக்கு பாஜ மற்றும் மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் நான் பேக்கேஜ் வாங்கிவிட்டேன் என்றும் பாஜவின் பி டீம் என்றும் கூறுவது சரியல்ல. எனக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளநிலையில் பாஜகவுடன் பேக்கேஜ் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உடனடியாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு எப்போதும் துணைநின்று பிரச்னைகளை தீர்க்கவே வந்துள்ளேன். அதற்காக 20 ஆண்டுகள் ஆனாலும் போராடுவேன். மக்கள் பிரச்னை குறித்து பேசினால் ஆளுங்கட்சி அரசியலாக்குகிறது. ஆளும் ஜெகன் அரசு என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் பயப்படமாட்டேன்’ என்றார்.

Tags : Bhavan Kalyan ,
× RELATED பவண் கல்யாண் ரசிகரின் திருமண...