திருவனந்தபுரம்: லூசிபர் 2 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபகாலமாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்ற படங்களை உருவாக்கி, அதில் நடித்து புகழ் பெற்றுள்ளார் பிருத்விராஜ். இவர் லூசிபர் படம் மூலம் டைரக்டராகவும் மாறி ஜெயித்தார். இதையடுத்து ப்ரோ டாடி என்ற காமெடி படத்தை இயக்கி நடித்தார் பிருத்விராஜ். இதில் அவரது ஆஸ்தான நடிகரான மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாக நடித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் ஸ்பெஷல் கேமியோவாக பிருத்விராஜும் நடித்திருந்த லூசிஃபர் திரைப்படம் அரசியல் திரில்லர் கதை கொண்ட படமாக உருவாகியிருந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய ஹிட்டானது. படத்தில் ஆபிரகாம் குரேஷி எனும் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் வெளிநாட்டில் அவரது ராஜாங்கத்தை நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், லூசிஃபர் 2 படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் குரேஷி ரிட்டர்ன்ஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதிய டீமுடன் மோகன்லால், பிருத்விராஜ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இதுதான் எம்புரான் படத்தின் டீம் என டிவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்க உள்ளதாம்.