×

மேகதாது அணையால் தமிழகம் பாலைவனமாகக்கூடிய சூழ்நிலை உருவாகும் : ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் கூறியது கண்டிக்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேகதாது அணை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 08) வெளியிட்ட அறிக்கை:’உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் ‘மேகதாதுவில் அணை கட்டப்படும்’ என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.மேகதாதுவில் அணை கட்ட 2014-ம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக்கூடாது என, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, இரண்டு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, என்னால் 5-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானங்கள் 12-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன். இது தொடர்பாக 26-03-2015 அன்று தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான அறிவிப்பு, தமிழக மக்களை குறிப்பாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழகம் பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.’அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கர்நாடாக முதல்வர் தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அதிமுகவின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும்.எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’.இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்….

The post மேகதாது அணையால் தமிழகம் பாலைவனமாகக்கூடிய சூழ்நிலை உருவாகும் : ஓபிஎஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cloudadu ,Chennai ,Karnataka ,CM ,Cloudadi Dam ,Bannerselvam ,Cloudadu Dam ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...