×

காமாட்சி அம்மன் கோயிலில் புதுவை கவர்னர் தமிழிசை தரிசனம்: சங்காராச்சாரியாரிடம் ஆசி பெற்றார்

காஞ்சிபுரம்: புதுச்சேரி கவனர் தமிழிசை சௌந்தர்ராஜன், தனது குடும்பத்துடன், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில்,  கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி, உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நடந்தது.அதில், அவர் கலந்து கொண்டார். பின்னர், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது. தற்காலிக பாதுகாப்புக்கு முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றுங்கள். நிரந்தர பாதுகாப்புக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஊரட்ஙகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறந்தவுடன் முதல்முறையாக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளேன். 3வது அலை வந்து விடவே கூடாது. எந்த உயிரிழப்புகளும் ஏற்படக்கூடாது என காமாட்சி அம்மனை வேண்டி கொண்டேன். கோயிலுக்கு செல்பவர்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது கூட முகக் கவசத்தை கழட்டாமல் இறைவனை வணங்குங்கள் .முகக்கவசத்தை எடுக்காமல் இறைவனை வணங்கினால் தான் நிரந்தரமாக முகக்கவசம் போடாத ஒரு சூழல் வரும். புதுச்சேரி மக்கள் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுவிட்டனர்.புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முககவசம் போட நாம் பழகி கொண்டது போல, தலைக்கவசம் அணியவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சங்கரமடத்தில் மகாபெரியவர் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்று மகாபெரியவரின் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார். பிறகு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். காமாட்சி அம்மன் படத்தையும், கோயில் பிரசாதத்தையும் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்கினார். முன்னதாக, காமாட்சி அம்மன் கோயில் முன்பாக கலெக்டர் ஆர்த்தி, டிஐஜி சத்தியபிரியா, எஸ்பி சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து, வரவேற்றனர். கோயில் நுழைவாயிலில் கோயில் காரியம் சுந்தரேச ஐயர், சங்கர மடத்தின் மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர்  மேளதாளங்களுடன் வரவேற்றனர். கவர்னர், அம்மனை தரிசனம் செய்தார் அவருக்கு அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து குங்கும பிரசாதங்களை வழங்கினர். இந்நிகழ்வில் பாஜ மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, காஞ்சி குமாரசாமி, ராஜவேல், நகர தலைவர் ஜீவானந்தம் உள்பட பாஜ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

The post காமாட்சி அம்மன் கோயிலில் புதுவை கவர்னர் தமிழிசை தரிசனம்: சங்காராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Puduwai Governor Tamilisai ,Kamachi Amman Temple ,Sankaracharya ,Kanchipuram ,Puducherry ,Kavanar ,Tamilisai Soundarrajan ,Kanchipuram Kamachi Amman temple ,Kamatshi Amman Temple ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை