×

சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் காரை எட்டி உதைத்த யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் குட்டியுடன்  காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு. காரில் வந்தவர்கள் காரை விட்டு இறங்கி தெறித்து ஓட்டம். காரை எட்டி உதைத்த யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றன. காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை பறித்து தின்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் ஆசனூர் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் குட்டியுடன் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தது. அப்போது சோதனை சாவடி வழியாக வந்த ஒரு காரை யானைகள் சுற்றி வளைத்தது. காரில் வந்த பெண் பயணிகள் அச்சமடைந்து காரை விட்டு இறங்கி தெறித்து ஓடினர். காரில் இருந்து இறங்கி ஓட முடியாத பெண் ஒருவரை ஆண் ஒருவர் வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி சென்றார். பின்னர் திடீரென காரின் அருகே வந்த யானைகள் காரை காலால் எட்டி உதைத்தது. தொடர்ந்து தனது குட்டியுடன் யானைகள் நீண்ட நேரம் நின்றிருந்ததால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குட்டியுடன் காட்டு யானைகள் சோதனை சாவடியில் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் வனத்துறையினர் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்  பின்னர் வனப்பகுதிக்குள் தனது குட்டியை அழைத்து சென்றதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. வனச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மித வேகத்தில் இயக்குமாறும் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் காரை எட்டி உதைத்த யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Karapallam Forest checkpoint ,Sathyamangalam ,Satyamangalam ,Sathamangalam ,Dinakaran ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு