×

மண்பானைக்குள் வைக்கோல் வைத்து பாம்புகளை பாதுகாக்கும் ஊழியர்கள்: குளிர், மழையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை

சென்னை: மாமல்லபுரம் அருகே பாம்பு பண்ணையில் மண்பானைக்குள் வைக்கோல் வைத்து பாம்புகளை  ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர். மாமல்லபுரம் வட நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி முதலைப் பண்ணை உள்ளது. இந்த, முதலைப் பண்ணை வளாகத்திற்குள் இருளர், பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் இயங்கி செயல்பட்டு வருகிறது. இந்த, சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 350 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தமிழக அரசிடம் அனுமதி பெற்று ஆண்டுதோறும் பாம்புகளை பிடித்து இப்பண்ணைக்கு வழங்குகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பாம்புகளை பிடிக்கின்றனர். மேலும், பிடித்துவந்த பாம்புகளை மண் பானையில் அடைத்து வைத்து, பின்னர் ஒவ்வொரு பாம்பிலிருந்தும் விஷம் எடுக்கப்படுகிறது. அப்படி, எடுக்கப்படும் விஷம் அங்குள்ள ஆய்வகத்தில் பவுடராக்கி, அதனை மும்பை, பூனே, ஐதராபாத் பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து, ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கேன்சர், புற்றுநோய், ரத்த கசிவு நிற்க, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த விஷத்தை பயன்படுத்தப்படுகிறது. பாம்பு, பிடிக்கும் இருளர்களுக்கு நல்ல பாம்புக்கு ரூ. 2,300, கண்ணாடி வீரியன் ரூ. 2,300, கட்டு வீரியன் ரூ. 850, சுருட்டை வீரியனுக்கு ரூ. 300 என சன்மானம் வழங்கப்படுகிறது. நேற்று வரை, நல்ல பாம்பு 17, கட்டுவீரியன் 104, கண்ணாடி வீரியன் 25, சுருட்டை வீரியன் 583 உள்ளிட்ட 729 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரம் பகுதிகளில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும், குளிருக்கு பாம்புகள் தாக்கு பிடிக்காது என்பதால் பாம்பு பண்ணை நிர்வாகம் பானைகளுக்குள் வைக்கோலை நிரப்பி, பாம்புகளை அடைத்து பாம்பு பண்ணை ஊழியர்கள் பாதுகாக்கின்றனர்….

The post மண்பானைக்குள் வைக்கோல் வைத்து பாம்புகளை பாதுகாக்கும் ஊழியர்கள்: குளிர், மழையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mamallapuram ,Vada Nemmeli ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...