சென்னை: ஒன்றிய அரசை வலியுறுத்தி கிராமப்புற கோயில் திருப்பணிக்கு ஜிஎஸ்டி வரி பிடிப்பதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவர் வாசு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களுக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் திருப்பணிக்கான நிதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சுமார் 2500 கோயில்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி 18% வரி, சென்ட்டேஜ் 2%, தொழிலாளர் நலநிதி 1% உள்பட மொத்தம் 21% அதாவது ரூ.2 லட்சம் திருப்பணி நிதியில் சுமார் ரூ.40,000 பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் கோயில் திருப்பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் அரைகுறையாக முடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் கோயில் திருப்பணியைச் செய்து முடிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.ஒன்றிய அரசு பிடித்தம் செய்யும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய ஆவன செய்யுமாறு பலமுறை முறையிட்டும் பலன் இல்லை. இந்துக்களின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒன்றிய அரசு கோயில் திருப்பணிக்கு ஜி.எஸ்.டி. வரி பிடித்தம் செய்வது ஏன். எனவே கோயில்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ. 2 லட்சம் திருப்பணி நிதிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசு ஏற்பாடு செய்யும் மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post கிராம கோயில் திருப்பணிக்கு 18% ஜிஎஸ்டி வரி பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும்: கோயில் பூசாரிகள் நலச்சங்கம் முதல்வருக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.