×

நாடு தழுவிய அளவில் இன்று நடக்க இருந்த வங்கி ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நடவடிக்கை

புதுடெல்லி: அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இன்று நாடு தழுவிய அளவில் நடத்த இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வங்கி ஊழியர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.ஆனால், சில வங்கிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த 2005-ம் ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் – இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, எந்த வங்கிக் கிளைகளில் கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை, ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கிக் கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம், அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி, ஊழியர்களை வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். பணம் கொண்டு செல்லும் ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக அயல்பணி மூலம் தனியாருக்கு வழங்க சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.பின்னர், டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையருடன் கடந்த 10ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று, கடந்த 16ம் தேதி வங்கிகள் கூட்டமைப்புடன் மும்பையில் மீண்டும் ஒரு சுற்று பேச்சு நடந்தது. இதில், கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால், திடீர் திருப்பமாக ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் தலைமை தொழிலாளர் ஆணையர் (சிஎல்சி) ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில்   தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை அடுத்து, வேலை நிறுத்தப்போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள்  ஒத்திவைத்துள்ளன. இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின்(ஏஐபிஇஏ) பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாச்சலம் கூறுகையில், ‘‘தொழிலாளர் நல ஆணையர் உடனான பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்னைகளிலும் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது. அதோடு, கூட்டத்தில், ஐபிஏ மற்றும் தொழிற்சங்கங்கள் சர்ச்சைக்குரிய  பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க சிஎல்சி அறிவுறுத்தியது. அதே நேரத்தில்  அரசாங்கப் பிரதிநிதியும் வங்கி ஊழியர் சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை  ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஐபிஏ மற்றும்  வங்கிகள் ஆகிய இருதரப்பும் பிரச்சினைகளை தீர்க்க ஒப்புக்கொண்டன. எனவே எங்கள்  வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்தார்….

The post நாடு தழுவிய அளவில் இன்று நடக்க இருந்த வங்கி ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,All India Bank Staffers Association ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...