திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில், 2வது கட்டமாக புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 80 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியை இணைத்து, இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாக திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை கடந்த 2021ல் மத்திய அரசு அறிவித்தது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், மான், ராஜநாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு மூன்று விதமாக நடத்தபடும். அனைத்து வகை வனவிலங்குகளுக்கு ஒரு முறை, யானை மற்றும் புலிகளுக்கு தனியாக என கணக்கெடுப்பு பணி நடைபெறும். அப்போது நேரில் பார்த்தவை, விலங்குளின் ஒலி, எச்சம், கால்தடம், கேமரா பதிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும்.