×

கொட்டாம்பட்டி அருகே 123 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

 மதுரை : கொட்டாம்பட்டி அருகே குன்றக்குடி ஆதீனம் சார்பில் 123 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி, மாணவர்கள் கோகிலா, மனோஜ், டோனிகா, பிரவீணா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். மதுரை கொட்டாம்பட்டி அருகில் உள்ள பள்ளபட்டி, அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், மந்தைத் திடல் பகுதியில் ஆய்வு செய்தபோது, இப்பகுதியில் சாய்ந்த நிலையில் கிடந்த ஆறடி உயரமுள்ள ஒரு கல் தூணில் கல்வெட்டு இருப்பதைக் கண்டுபிடித்துப் படித்தனர். இக்கல்வெட்டில் மொத்தம் 19 வரிகள் உள்ளன. கல்வெட்டின் கீழே பெரிய மீன் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் ராஜகுரு கூறும்போது, ‘‘இந்த கல்வெட்டில் ‘விளம்பி வருஷம் தை மாதம் 3ம் நாள் லெட்சுமி தாண்டவபுரத்திலிருந்து பிரான்மலை வாருப்பட்டி வரையில் திருவண்ணாமலை ஆதீனம் தாண்டவராய தேசிகர் அவர்களால் புதிதாய் போடப்பட்ட வயிரவன் சாலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கிபி 1899 ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியமான சில சாலைகளில் மட்டுமே சரளைக்கல் போடப்பட்டிருந்தது. குதிரை, மாட்டு வண்டிகள் செல்லும் மற்ற சாலைகள் மழைக்காலங்களில் பயன்படாமல் போயின. சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 40வது மடாதிபதியாக கிபி 1893 முதல் 1902 வரை இருந்த தாண்டவராய தேசிக சுவாமிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக இச்சாலையை அமைத்துக் கொடுத்துள்ளார். இச்சாலை வயிரவன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தை வளர்ப்பதற்காக கிபி 16ம் நூற்றாண்டு முதல் பல சைவ ஆதீன மடங்கள் தோன்றின. இவை சைவ சமயத்தைக் காக்க பெரும்பங்காற்றியுள்ளன. சைவ மட ஆதீனம் மக்கள் நலனை முன்னிறுத்தி சாலை அமைத்துக் கொடுத்து மக்களுக்கு உதவியதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. பள்ளபட்டி எனும் இவ்வூர் பெயர் கல்வெட்டில் லெட்சுமி தாண்டவபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்….

The post கொட்டாம்பட்டி அருகே 123 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kottampatti ,Madurai ,Kunrakkudi Atheenam ,Ramanathapuram… ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா