ரங்கபஞ்சமி 12.3.2023 - ஞாயிறு
ரங்கபஞ்சமி என்பது வடநாட்டில், குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்குப் பின்னால் மக்கள் கொண்டாடும் வண்ணத் திருவிழா. இந்தத் திருவிழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படும்.
பால்குண மாதம் என்று சொல்லப்படும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. (சாந்ரமான முறைப்படி மாசி அமாவாசைக்கு பின் பங்குனி மாதம் வந்துவிடும்). வண்ணப் பொடிகளை வானத்தில் இறைத்து, கடவுள்களை அலங்கரித்து ஊர்வலம் விடுவார்கள். மக்கள் குதூகலத்தோடு கொண்டாடும் வசந்த காலத் திருவிழா இது.
காஞ்சிபுரத்தில் பல்லவ உற்சவம் 12.3.2023 - ஞாயிறு
பங்குனி மாதத்தில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சந்நதியில் எட்டு நாட்கள் நடைபெறும் பங்குனி மாதவிழா இது. பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. பல்லவம் என்றால் இளம்தளிர் என்று பொருள். மரங்கள் எல்லாம் துளிர்விடும் மாதம் பங்குனி மாதம். இந்த மாதத்தில் நடக்கும் சிறப்பான இந்த உற்சவம், வரதராஜ பெருமாளின் கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாளும் தீர்த்தபேரான பிரணதார்தி ஹரவரதனும் எழுந்தருள்வார்கள். பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள். மூன்றாம் நாள் பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு. வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சிபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் பற்பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று பல சுருதியில் கூறப்பட்டுள்ளது. 18.3.2023 அன்று உற்சவத்தின் சாற்றுமுறை அதாவது நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
திருக்கண்ணபுரம் தெப்பம் 12.3.2023 - ஞாயிறு
வைணவத்திவ்யதேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்குதான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. ஐந்து கிருஷ்ண ஆரண்ய தலங்களில் ஒன்று. நீலமேகப் பெருமாள், சௌரிராஜ பெருமாள் என்ற திருநாமத்தோடு பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்குநோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக்கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். கண்ணபுரத்து நாயகி என்று தாயாருக்கு பெயர். பத்மினி என்றும் இவருக்கு பெயர் உண்டு. இந்த விமானத்திற்கு `உத்பலா பதேகே’ விமானம் என்று பெயர். திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.
வீகடாஷனை அழித்த பிரயோக சக்கரத்துடன் காட்சி தருவது இந்த தலத்தில்தான். மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறும். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன் பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜ பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்கக் கருடவாகனத்தின் மீது அமர்ந்திருப்பார். மீனவர்கள் குலத்தில் பிறந்த பத்மாவதித் தாயாரை பெருமாள் திருமணம் செய்து கொண்டார் என்பதினால் திருக்கண்ண புரத்திற்குக் கிழக்கே உள்ள மீனவர் கிராமங்களில் இவரை ‘‘எங்கள் மாப்பிள்ளை சாமி’’ என்று அழைப்பார்கள். பெருமாளுக்கு சௌரிராஜப் பெருமாள் என்று ஏன் பெயர் வந்தது என்பதற்கு ஒரு கதை உண்டு. இக்கோயில் அர்ச்சகர் ஒருநாள், கோயிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமியின் மாலையைத் தந்தார். அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது.
இதனால் கோபங்கொண்ட அரசன் காரணம் கேட்டான். அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன், தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் மரண தண்டனை என்று சொல்லி சென்றுவிட்டான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம் கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜ பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார். உற்சவர் திருவீதி உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.
காளமேகப்புலவர் நிந்தாஸ்துதியாக பாடல் பாடுவதில் வல்லவர். அவர் ஒருநாள் பெருமாளை தரிசிக்க வந்தார். அப்பொழுது நடை சாற்றப்பட்டு இருந்தது. பெருமாளை தரிசிக்க முடியவில்லை. உடனே பொய்க்கோபம் கொண்ட காளமேகப் புலவர், ``பெருமானே நீதான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு கதவை மூடிவிட்டாய். ஒன்று சொல்கிறேன் கேள். உன்னைவிட நான் தான் பெரியவன். எப்படி என்று கேட்கிறாயா? நீ 10 அவதாரங்கள்தான் எடுத்திருக்கிறாய். நான் எத்தனை பிறவி என்கிற கணக்குப் பார்த்தால் உன்னைவிட என் பிறவிகள்தான் அதிகம். அதனால், நான்தான் பெரியவன்’’ என்று பொருள் படும்படியாக ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல் இது.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது
விபீஷணனுக்கு நடை அழகு காட்டிய கீழை திருப்பதி இந்தத் திருப்பதி. முனியோதரன் என்ற பக்த சிகாமணி தினசரி பொங்கல் நிவேதனம் வைத்து படைப்பான். ஒரு நாள் அவன் ஆசையோடு தயாரித்து வந்த பொங்கலைப் படைப்பதற்கு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை சாற்றப்பட்டு விட்டது. ``ஐயோ... பெருமாளுக்கு படைக்க முடியவில்லை’’ என்று துடிதுடித்துப் போனான். அவனுடைய ஏக்கத்தைக் கண்ட பெருமாள், அவனுடைய நிவேதனத்தை ஏற்றுக் கொண்டார். மறுநாள் காலையில் பெருமாளுடைய திருவாயிலே இந்த பொங்கல் பிரசாதமும் மீதமும் இருந்ததைக் கண்டவர்கள், முனியோதரன் பக்தியை மெச்சினார்கள்.
அன்று முதல் அர்த்த ஜாமத்தில் படைக்கப்படும் பொங்கலுக்கு `முனியோதரன் பொங்கல்’ என்று பெயர். திருக்கண்ணபுரத்தில் பெருமாளுக்கு மாசி மகத்தை ஒட்டி பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் மிகச் சிறப்பான உற்சவம் தெப்ப உற்சவம். விடிய விடிய பெருமாள் உபய நாச்சிமாரோடு தெப்பத்தில் வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மிகப்பெரிய புஷ்கரணி இது. நித்ய புஷ்கரணி என்ற இந்த புஷ்கரணியின் கரையில் நின்று தெப்ப உற்சவத்தைப் பார்ப்பது கண்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். பெருமாளின் திருவருளும் கிடைக்கும். அன்றைய தினம் அலை கடலென மக்கள் வெள்ளத்தில் திருக்கண்ணபுரம் மூழ்கி இருக்கும். அவசியம் பார்க்க வேண்டிய உற்சவம்.
சஷ்டி 13.3.2023 - திங்கள்
முருகப்பெருமானை எண்ணி வணங்கும் பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம். இது மாதம் ஒரு முறை வரும். சில மாதங்களில் இரண்டு முறையும் வரலாம். அதே போலவே திதியின் அடிப்படையில் முருகப் பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் ஆறாவது தியான சஷ்டி நாள். இந்த நாளில் காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப் பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல்களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு, பூஜைஅறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப்பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூப - தீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். அதுவும் இன்றைய நாள் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை, முருகனுக்குரிய விசாக நட்சத்திரத்தில் தொடங்குகிறது. விசாகம், குருவின் உடைய நட்சத்திரம் அல்லவா. இன்றைய தினம் கீழ்க்காணும் கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
சம்பத் கௌரி விரதம் 15.3.2023 - புதன்
காரடையான் நோன்பு தவிர இன்று வேறு பல விசேஷங்களும் இணைந்து இருக்கின்றன.
1. மாதப் பிறப்பு
2. அஷ்டகா
3. புதாஷ்டமி
4. சம்பத் கௌரி விரதம்
1. மாதப் பிறப்பு
முதலில் பங்குனி மாதப் பிறப்பு என்பதால் மாத பிறப்புப் பூஜையைச் செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள்.
2. அஷ்டகா
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான 96 தர்ப்பண நாட்களில் இன்று அஷ்டகா நாள். ஒவ்வொரு வருடமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு, முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது. மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களின் கிருஷ்ண பட்ச ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்ய வேன்டும். அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய பிரதானமாகக் கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+ அஷ்டகா=அந்வஷ்டகா என்று பெயர். இதன் மூலம் முன்னோர் ஆசி கிடைக்கும்.
3. அஷ்டமி பூஜை
அமாவாசை, பௌர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாவது திதியான அஷ்டமி திதி புதன்கிழமை அன்று அமையப்பெற்றால், புதாஷ்டமி என்று பெயர். அளப்பரிய நன்மைகளை அள்ளித் தரும் இந்த நாளில், சிவன் கோயிலுக்கு சென்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும் அல்லது துர்க்கையை வணங்க வேண்டும் அல்லது அஷ்டமி திதியில் பிறந்த கண்ணனை, வெண்ணெய் வைத்து வணங்க வேண்டும். இதனால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
4.சம்பத் கௌரி விரதம்
ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ‘‘கௌரி விரத நாட்கள்’’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில், பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவது தானே முக்கியமான நோக்கம்.
