திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் 9 நாட்கள் கொண்ட வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 7 தலை கொண்ட பெரியசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அயிரக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த வீதிஉலாவில் புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம், கிருஷ்ண மகிமை உள்ளிட்ட சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். நேற்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 3வது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமியும், இரவு முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்….
The post திருப்பதியில் 2ம் நாள் கோலாகலம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் அருள்பாலிப்பு appeared first on Dinakaran.