×

வெற்றி விநாயகர்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று போற்று கின்றனர் நம்முன்னோர்கள். அதனால்தான், கடிதமா... பிள்ளையார் சுழி, கட்டிடமா... கணபதிஹோமம், காவியமா... விநாயகர் துதி, கல்யாணமா... மஞ்சள் பிள்ளையார் என எல்லாவற்றைக்கும் விநாயகரின் வழிபாட்டையே முதலாக நிகழ்த்துகின்றோம்.‘கலை நிறை கணபதி’ என்றும் ‘கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ’ என்றும் அறிவு தரும் ஆண்டவனாக அவர் விளங்குவதால்தான், ‘பாலும் தேனும் பாகும் பருப்பும் என நாலும் படைத்து ஔவைப்பாட்டி சங்கத்தமிழ் மூன்றும் விநாயகனே எனக்குத்தா’ என வேண்டுகிறார். குழந்தையின் இயல்பறிந்து அதற்கு ஏற்றாற் போல் பேச செந்தமிழ் மூதாட்டிருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

‘நான் உனக்கு நான்கு தருகிறேன். பதிலுக்கு நீ மூன்று தந்தால் போதும்’ என்று குழந்தையுடன் கேட்டால் எண்ணிக்கையில் ஏமாந்து கையில் உள்ள விலை உயர்ந்ததையும் குழந்தை எளிதாகத் தந்துவிடுமல்லவா? பக்குவமாகப் பாடுகின்றாள் பைந்தமிழ்ப்பாட்டி;

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா


இன்னொரு புலவர் ஆனைமுகனாகிய குஞ்சரக்கன்றின் அருள்இருந்தால், அறிவு தானாக வருமே! கற்கின்ற சரக்கா கல்வி? என வித்தகமாக விவரிக்கின்றார்.
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்

எண்ணும் எழுத்தும் அவர் தரும் உபயம் தானே!எனவே தாம் பாடும் எழுத்தில் ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக எண் அமைய, அத்துடன் ஆனை, ஆனை என்று விநாயகரைத்துதித்து மகிழ்கின்றார் ஒரு புலவர்!

வஞ்சத்தில் ஒன்றானை துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலும்
நால்வாயானை அத்தனாகித்
துஞ்சவுணர்க்கு அஞ்சானை சென்னி அணி
ஆறானை துகள் எழானைச்
செஞ்சொல் மறைக்கு எட்டானைப் பரங்கிரிவாழ்
கற்பகத்தைச் சிந்தை செய்வாம்!


‘அழகான தந்தம் ஒரு பக்கம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை, அறிவான கிரந்தம் மகாபாரதம் உலகிற்கு வேண்டும்’ என எண்ணி தன் ஒரு பக்க தந்தத்தை ஒடித்து முத்தமிழ் அடைவினை முறைபடுகிரிதனில் முற்பட எழுதிய முதல் வோன் விநாயகர்! அவர் முன் நாம் எல்லாம் கும்பிடு மட்டும் போட்டால் போதுமா? முதல் தெய்வத்திற்கு அதிகப்படியான வழிபாடுகள்! என்னென்ன?மற்ற எந்த சந்நிதானத்திற்கு முன்னும் இவ்விரண்டு வழிபாடு கிடையாது. அது என்ன என்று அருணகிரிநாதர் திருப்புகழில் கூறுகின்றார்;

1) குட்டிக் கொள்ளுதல், 2) தோப்புக் கரணம் போடுதல் வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு வசை பரிபுர பொன் பத அர்ச்சனை மறவேனே (நினது திருவடி)

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ அல்லவா! விநாயகரைப் பொறுத்தவரை முழு முதல் தெய்வங்களான பார்வதி பரமேஸ் வரர்தான் அவரின் பெற்றோர். எல்லையில்லா மகிழ்வோடு பிள்ளைச் செல்வமான பிள்ளையாரை உச்சி முகர்ந்து மெச்சியும் முத்தமிட்டும் மகிழ்ந்தனர். சிவனும், சக்தியும்! விளையாட்டு விநாயகர் தாய், தந்தையிடம் விண்ணப்பம் ஒன்று வைத்தார்.

‘என் இடது பக்கம் சற்று தள்ளி, அம்மா நீங்கள் நின்று கொள்ளுங்கள்!. அப்பா! நீங்கள் இருவரும் ஓடி வந்து நடுவில் நிற்கும் என் கன்னத்தில் ஓரே சமயத்தில் முத்தம் தரவேண்டும்’ என்றார். பிள்ளையின் ஆவலைப் பூர்த்தி செய்ய இருபுறமும் நின்ற இருவரும் ஓடி வந்தனர். பக்கத்தில் வரும்போது பிள்ளையார் சற்று பின்னுக்குச் சென்று விட பார்வதி பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள் முட்டிக்கொண்டனர்! முத்தமும் இட்டுக் கொண்டனர்!

இதை ரசித்த படியே சிரித்தாரம் விநாயகர்!
மும்மைப் புவனம் முழு தீன்ற
முதல் வியோடும் விடைப்பாகன்
அம்ம தருக முத்தம் என
அழைப்ப ஆங்கே சிறிதகன்று
தம்மில் முத்தம் கொள நோக்கிச்
சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரித் திருத்தாள் நம்
சென்னி மிசையும் புனைவோமே!


ஆனைமுகனின் பிள்ளைக்குறும்பை மேற்கண்டவாறு பாடுகிறார் ஒரு புலவர்; பன்னிரு திருமுறையின் முதல் பாடலான ‘பிடியதன் உருஉமை’ என்ற பாடல் பிரசித்தி பெற்ற பலர் அறிந்த விநாயகர் துதி. ஆனால், அப்பாடல் உணர்த்தும் செய்தி பலர் அறியாத ஒன்று.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடி கொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினர் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!


நீண்டு ஒலிக்கும் ‘வா! போ! பூ! மா!’ போன்ற நெடில் எழுத்துக்களே வராதபடி குறில் எழுத்துக் களில் மட்டுமே மேற்கண்டதுதி அமைந்துள்ளது. இறைவனே நெடியவர்! மேலானவர்! மனிதர்களாகிய நாம் அனைவரும் அவர்முன் குறுக வேண்டும்! பயபக்தியுடன் அவர் பாதம் பணிய வேண்டும் என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.

அந்தக் குறில் எழுத்துப் பாடல். மகா கணபதி மகிமையில் சிறந்தவராக இருந்தாலும், நமக்காக இரங்கி வந்து களிமண்ணில் வடிவம் ஏற்கிறார்! காகிதக்குடை நிழலில் காட்சி தருகிறார்! எளிமையான எருக்கம்பூ மாலையை ஏற்றுக்கொள்கிறார்! பூ கூட வேண்டாம்! புல்லால் அர்ச்சனை போதும் என்கிறார்! அதனால்தான், `விநாயகர் நான்மணி மாலை பாடி’ மகாகவி பாரதியார் விநாயகரை இப்படி வாழ்த்துகிறார்.

ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை!
வாழும் பிள்ளை! மணக்குளப் பிள்ளை!

Tags : Ganesha ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி