×

திருமணம் ஆன 11 நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் திருமணம் ஆன 11 நாளில், மனைவியின் புடவையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்பு மகன் அசோக் (27). இவர், மத்திய மீன்வளத்துறையில் உதவியாளராக தற்காலிக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்.7ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், வேம்பி கிராமத்தைச் சேர்ந்த கருணா மகள் காயத்ரி (26) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அசோக் மனைவி காயத்ரி மற்றும் பெற்றோருடன் தாமலில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 7 மணியளவில் அசோக்கின் தாயுடன் மனைவி காயத்ரி சர்ச்சுக்கு சென்றுள்ளார். தந்தை அன்புவும் வெளியில் சென்றிருந்த நிலையில் அசோக், மனைவி காயத்ரியின் புடவையில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 8 மணியளவில் தந்தை அன்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசோக், மின்விசிறியில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து மீட்டு அருகில் உள்ள திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அசோக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அசோக்கின் தந்தை அன்பு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த அசோக் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தும் பழக்கத்தால் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருமணம் ஆன 11 நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Thamal ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...