×

செண்பகராமன்புதூரில் ரேஷன் கடை திறக்க தாமதம் பொதுமக்கள் தர்ணா

ஆரல்வாய்மொழி : செண்பகராமன்புதூர் நியாயவிலை கடை மதியம் 11 மணி ஆகியும் திறக்காததால் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட இலந்தைநகர் பகுதியில் ஒரு நியாயவிலை கடையும், இந்திரா காலனி பகுதியில் ஒரு நியாய விலை கடையும் ,செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியில் ஒரு நியாய விலை கடையும் இயங்கி வருகிறது. இதில் சமத்துவபுரம் பகுதியில் இயங்கி வருகின்ற நியாய விலை, இந்திரா காலனியில் இயங்கி வருகின்ற நியாயவிலை கடை வியாழன் மற்றும் சனிக்கிழமை மட்டும் இயங்குகின்ற பகுதி நேர கடையாக செயல்பட்டு வருகின்றன. மற்ற 4 நாட்களும் இலந்தைநகர் பகுதியில்  ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடை இயங்கி வருகிறது.  இந்நிலையில் ஊராட்சி அலுவலகம் அருகே இயங்கி வருகின்ற நியாயவிலை கடையில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இக்கடையானது காலை 11 மணி ஆகியும் திறக்காமல் அதற்கு பின்னர் திறக்கப்படுவதாக பொதுமக்கள் அடிக்கடி குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இது பற்றி செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரத்திடம் புகார்  தெரிவித்தனர். இப்புகாரின் அடிப்படையில் அவர் நியாயவிலை கடையில் பணி புரிகின்ற ஊழியர்களிடம்  அதிக அளவு குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதன் காரணத்தினால் கால தாமதம் இல்லாமல் கடையினை காலையில் திறக்க  கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் நேற்றும் வழக்கம்போல் பொதுமக்கள் காலையில் நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது கடையானது வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை.  இது பற்றி பொதுமக்கள் செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரத்திடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் பொதுமக்களுடன் கடையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தார். இதனிடையே கடையில் பணிபுரியும் ஊழியர் சுமார் 11 மணி அளவில் கடையை திறக்க வந்தார். அப்பொழுது பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தான் வங்கிக்கு சென்று விட்டு வந்ததால் காலதாமதம் ஆகிவிட்டதாகவும், இனி இவ்வாறு காலதாமதம் ஆகாது எனவும் கடை ஊழியர் உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்….

The post செண்பகராமன்புதூரில் ரேஷன் கடை திறக்க தாமதம் பொதுமக்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Chenpakaramanputur ,Aralvaimozhi ,Senpakaramanputhur ,panchayat council ,president ,Kalyanasundaram ,Chenpakaramanputhur ,
× RELATED இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி