×

பன்மடங்கு வளம் தரும் விருத்தகிரீஸ்வரர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை-பாலாம்பிகை சமேதராய் அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது இத்திருக்கோயில். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது. விருத்தாசலம், விருத்தகாசி, பழமலை, திருமுதுகுன்றம் என இதற்கு பல பெயர்கள் உள்ளன. இத்தலம் புராண பெருமையும் வரலாற்றுச் செறிவும் நிறைந்து காணப்படுகிறது. நால்வரால் பாடல் பெற்ற இத்தல ஈசனை வள்ளலார், குருநமச் சிவாயர், குமாரதேவர் ஆகியோரும் பாடிப் பணிந்துள்ளார்கள். இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது.

இத்தலத்திலுள்ள திருச்சுற்றுகள் ஐந்து. கோபுரங்கள் ஐந்து. கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள்மண்டபங்கள், இத்தல விநாயகர்கள் என எல்லாமே ஐந்து மயம்தான். பரந்து விரிந்து கிடக்கும் இத்தலத்தை முழுதாக தரிசிக்க ஒருநாள் போதாது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்து பிள்ளையார் கிழக்கு முகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். அறுபடை முருகனுக்கு உள்ளது போன்று விநாயகருக்கான ஆறு வீடுகளில் இதுவும் ஒன்று. கைலாச பிராகாரத்தில் 28 ஆகமக் கோயில் இருக்கிறது.

28 ஆகமங்களும் சிவலிங்கங்களாக அமைக்கப்பட்டு இத்தலத்தில் பூஜிக்கப்படுகின்றன. வடக்கு கைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள் பொங்க நிற்கிறாள். அன்னையை விருத்தாம்பிகை என்றும் அன்போடு அழைப்பார்கள். அன்னையின் தரிசனம் மன இருளை நீக்கி உள்ளத் தெளிவு தரும். அன்னையின் சந்நதியின் வெளிப்புறம் சிவகதி அடைந்த நாதசர்மா-அநவர்த்தினி தம்பதியின் கோயிலை தரிசிக்கிறோம். வன்னியடி பிராகாரத்தில் மடப்பள்ளிக்கு மேல்புறம் தலவிருட்சமான வன்னி மரம் இருக்கிறது.

இங்கே பிள்ளையார், விபசித்து முனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி, குபேரனின் தங்கை ஆகியோரின் தரிசனம் பெறுகிறோம். கொடிமர மண்டபத்தில் உற்சவமூர்த்தியான பெரியநாயகரின் அழகு தரிசனம். அடுத்து ஆடலர சனின் ஆனந்த நடனம் கண்டு அறுபத்து மூவர் பிராகாரத்தை அடைகிறோம். இங்கே அறுபத்து மூவர், மாற்றுரைத்த பிள்ளையார், யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதாக்கள் ஆகியோரின் அருட்பார்வையில் நனைகிறோம். இளமை நாயகியான பாலாம்பிகையின் தரிசனத்தில் பரவசமடைகிறோம். இத்தலத்தில் உள்ள காலபைரவர் காசியில் உள்ள பைரவரை போன்றே அமைந்துள்ளார்.

அடுத்து நாம் நகர்வது கருவறையை நோக்கி. திண்டியும், முண்டியும் காவல் இருக்க, பழமலையாய் தோன்றிய ஈசன், நம் பாவங்களை தம் அருள் பார்வையால் துடைத்து அருள்கிறார். ஐயனை காணும் போது அகம் தெளிகிறது. உள்ளம் ஆனந்தத்தால் நிறைகிறது. தம்மை வணங்குபவர்கள் இந்த பூவுலகிலும், மேலுலகிலும் எல்லா வளத்துடனும் நல்ல வண்ணம் வாழ அருள்புரிகிறான் பழமலைநாதன். ஐந்தின் அதிசயமாக விளங்கும் இத்திருக்கோயில், நம் வாழ்வின் நற்பயன்களை குறைந்தபட்சம் ஐந்து மடங்காவது உயர்த்தும் என்ற நம்பிக்கை மனநிறைவை ஏற்படுத்துகிறது.

Tags : Viruthakriswarar ,
× RELATED விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்