பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 7வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் (21). இவர், மாதவரம் மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் வாடகை வீட்டில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்த விஜய் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்க்கும் விஷாலுக்கும் அடிக்கடி சண்டை வந்ததால் விஷால் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு கொடுங்கையூருக்கு வந்து விட்டார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷாலை கொடுங்கையூர் பகுதியில் பார்த்த விஜய் அவரை மிரட்டி உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் விஷால் தனது கடையை மூடிவிட்டு கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் அரிவாளை எடுத்து விஷாலை கழுத்தில் வெட்ட வந்துள்ளார். சுதாரித்துக் கொண்ட விஷால், கையால் தடுக்கவே கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து விஜய் ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் விஷாலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விஜயை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் அருகே கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்தனர். விஜய் மீது திருவொற்றியூர், சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 16 வழக்குகள் இருப்பதும், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிய வந்தது. …
The post செல்போன் கடைக்காரரை வெட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.
