
ஐதராபாத்: பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை சமந்தா தயாரித்துள்ளார். இந்தப் படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்க தொடங்கியிருக்கிறார். விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சமந்தா, ‘‘விசாகபட்டினத்திற்கு எப்போது எல்லாம் வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் கிடைக்கும்.
இங்கு படமாக்கப்பட்ட மஜ்லி, ஓ பேபி ஆகிய எனது திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. எனினும், தயாரிப்பாளராக இந்த படத்தை ஒரு யோசனையுடன் தொடங்கினேன்’’ என்று கூறினார். மேடையில் பங்கேற்றபோது சமந்தா திடீரென கண்ணீர் விட்டார். இதற்கு முன்பும் பல மேடைகளில் இதேபோல் சமந்தா கண்கள்கலங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில் அடிக்கடி இவ்வாறு நடப்பது ஏன் என்பதற்கு சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது. அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் எனது கண்கள் சென்சிடிவ் ஆகி, கண்ணீர் வரும். இந்த காரணத்தில் தான் மேடைகளில் இருக்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும் இருக்கிறேன்’’ என்று சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

