×

2வது மனைவியுடன் வாழ காதல் மனைவி, குழந்தையை கொன்று கால்வாயில் வீச்சு: நாடகமாடிய கணவன் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டா மண்டலம் குரவராஜூபல்லே கிராமத்தை சேர்ந்தவர் குமார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பவானி(19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அமிர்தா என்ற 9மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் குமாருக்கும், நகரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணை, குமார் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். 2வது மனைவியுடன் வாழ பவானியும், குழந்தையும் இடையூறாக இருப்பார்கள் என்பதால் இருவரையும் கொலை செய்ய குமார் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 10ம் தேதி குமார், பவானி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு அருகே உள்ள கால்வாய் பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு பவானி மற்றும் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலங்களை கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்துள்ளார். தங்கள் மகள் மற்றும் பேத்தி குறித்து பவானியின் பெற்றோர் ேகட்டுள்ளனர். அதற்கு குமார், குழந்தையுடன் பவானி வீட்டை விட்டு ஓடிவிட்டார் எனக்கூறி நாடகமாடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பவானியின் பெற்றோர் கடந்த 11ம் தேதி ரேணிகுண்டா போலீசில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து குமாரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மனைவி மற்றும் குழந்தையை கொன்று சடலங்களை கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கால்வாயில் இருந்து சடலங்களை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post 2வது மனைவியுடன் வாழ காதல் மனைவி, குழந்தையை கொன்று கால்வாயில் வீச்சு: நாடகமாடிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Kumar ,Kuravarajupalle ,Renikunda mandal ,Tirupati ,Andhra Pradesh ,Bhavani ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ