×

மாமல்லபுரத்தில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடி பூத்துகள் அகற்றும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடி பூத்துகள் அகற்றப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.  இச்சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. இந்த சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிக வாகன போக்குவரத்து காரணமாக  அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது.விபத்தை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் விரைவில் சென்று சேரும் வகையிலும், மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல் புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, நான்கு வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. இதில், முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 30 கிமீ தூரமும், 2வது கட்டமாக முகையூர் – மரக்காணம் இடையே 30 கிமீ தூரமும், 3வது கட்டமாக மரக்காணம் – பாண்டிச்சேரி இடையே 30 கிமீ தூரமும் என அடுத்தடுத்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடக்க உள்ளது. இதில், கூவத்தூர் அருகே வடபட்டினம், மரக்காணம் அருகே தேன்பாக்கம், பாண்டிச்சேரி அருகே ஒரு டோல் பூத் என 3 டோல் பூத்துகள் அமைக்க ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.1270 கோடியில் முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் திருப்போரூர் செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள 2 டோல் பூத்துகள், மாமல்லபுரம் அடுத்த வெங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு டோல் பூத், மரக்காணம் அடுத்த அனுமந்தை டோல் பூத் என 4 டோல் பூத்துகளிலும், நான்கு வழிச்சாலை பணி முடியும் வரை கட்டணமின்றி பயணிக்கலாம் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4ந்தேதி அறிவித்தது. இந்நிலையில், பூஞ்சேரியில் பயன்பாட்டில் இல்லாத 2 டோல் பூத்தை பிரித்து அகற்றும் பணியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் கூறுகையில், “மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்து, நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அதிகாலை 1 மணி முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள டோல் பூத், வெங்கப்பாக்கத்தில் ஒரு டோல் பூத், மரக்காணம் அடுத்த அனுமந்தையில் ஒரு டோல் பூத் என 4 பூத்துக்களிலும், நான்கு வழிச்சாலை பணி முழுமையாக முடியும் வரை கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதன்படி பூஞ்சேரியில் பயன்பாட்டில் இல்லாத 2 டோல் பூத்துகளை அகற்றி வருகிறோம். வெங்கப்பாக்கம், அனுமந்தையில் உள்ள டோல் பூத்துகள் அடுத்தடுத்து அகற்றப்படும்” என்றனர். …

The post மாமல்லபுரத்தில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடி பூத்துகள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Pooncheri ,Puducherry ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு