×

எங்க வாழ்க்கைக்கான ஆதாரமே இந்த கடைதான்!

அண்ணா நகர் சிற்றுண்டி கடைசென்னை, அண்ணாநகர்‌ போகன் வில்லா பூங்காவில் மாலை நேரங்களில் மிகவும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய உணவகம். ஒரு பக்கம் நடைப்பாதையில் மக்கள் வாக்கிங் செய்துக் கொண்டிருப்பார்கள், குழந்தைகள் அங்குள்ள சறுக்கு மரம் மற்றும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்க… மறுபக்கம் வயதானவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பூங்காவிற்குள் இப்படி என்றால் பூங்காவிற்கு வெளியே ஆங்காங்கே உள்ள வண்டிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக சாரதா அக்கா கடையில் உள்ள பானிப்பூரி மற்றும் சமோசா சன்னாவிற்கு மட்டுமே சிறப்பு ரசிகர்கள் பட்டாளம் க்யூவில் நின்றுக் கொண்டிருப்பார்கள். “பூங்காவில் நடக்க வருபவர்கள், குழந்தைகளை விளையாட அழைத்து வருபவர்கள் மட்டுமில்லை. வேலைமுடித்து வீட்டுக்கு போகிறவர்களும்‌இங்கு வருவது வழக்கம்‌” என்று பேசத்‌துவங்கினார்‌ சாரதா.‘‘என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. பெரிய வசதி எல்லாம் இல்லாத சாதாரண குடும்பம். அப்பாக்கு தனியார்‌நிறுவனத்‌தில் வேலை. அப்பறம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை ஒத்திகைக்கு கொடுத்து வந்தோம். அப்பாவின் வரும் வருமானம் கொண்டு தான் எங்க குடும்பம் நகர்ந்தது. எங்க வீடு ஆந்திராவில் உள்ள சின்ன கிராமம். அதனால் ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியல. படிக்க ஆசை தான்‌. ஆனால்‌குடும்ப சூழல்‌அதற்கு ஒத்துழைக்கல. அதனால்‌வீட்டில்‌அம்மாவுக்கு உதவியா இருந்துட்டேன்‌. இதற்கிடையில் ‌எனக்கு 19 வயசில்‌ கல்யாணமாச்சு. என்‌கணவர் ரவிக்குமார் ஐதராபாத்‌தை சேர்ந்தவர். அதனால் திருமணத்திற்கு பிறகு அங்கு செட்டிலாயிட்டேன். அவருக்கு துணிக்கடையில் வேலை. குறைவான சம்பளம் என்பதால், நான்‌முத்து ரகம் ‌பிரிக்கும்‌ நிறுவனத்தில் ‌வேலைக்கு சேர்ந்தேன்‌. என்‌ நாத்தனார்‌ அங்கு வேலை பார்த்ததால், அவர் தான் எனக்கும் வேலை வாங்கிக் கொடுத்தார். வாழ்க்கையும்‌ ஓரளவு நன்றாக நகர்ந்துகொண்டு இருந்தது. அந்த சமயத்தில்‌ என்‌ கணவரின்‌ சின்ன அக்கா சென்னையில்‌. வசித்து வந்தார்‌. அவர் ‌இங்கு இதே போல்‌ தள்ளுவண்டியில்‌ சாட் உணவகம் நடத்தி வந்தார்‌. அவர்‌தான்‌ எல்லாரும்‌ சென்னைக்கு வத்திடுங்க. இங்க உணவு சம்‌மந்தமான தொழிலுக்கு நல்ல வருமானம்‌ இருக்குன்னு சொன்னார்‌. முதல்ல என்‌ கணவர்‌தான் சென்னைக்கு வந்து, அக்காவுடன்‌ சேர்ந்து இந்த தொழிலை முழுமையாக கற்றுக்கொண்டார்‌’’ என்றவர்‌1998ம்‌ வருடம்‌முதல்‌ இன்று வரை இதே பூங்காவில்‌தான்‌தொழில்‌ செய்து வருகிறார்களாம்‌. “என் கணவர் முதலில்‌ செனாய்நகரில்‌ தான்‌ கடையை ஆரம்பிச்சார். அதன்‌பிறகு சிந்தாமணியில், ஆறு மாசம்‌. அதனை அடுத்து இந்த பூங்கா முன்‌கடை போட ஆரம்பிச்சோம்‌. அப்ப எங்க கடையில் ஒரு மசாலா வேர்கடலை கடையும் தான் இங்க இருக்கும். ஆட்களும்‌ குறைவாத்தான்‌ வருவாங்க. எட்டு மணிக்கு மேல்‌ அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டமே இருக்காது. நானும்‌ என்‌சின்ன நாத்தனாரும்‌ தான்‌ பெரும்பாலும்‌ கடையில்‌ இருப்போம்‌. இவரும்‌ எங்களுக்கு உதவியா உடன்‌ இருப்பார்‌. கிட்டத்தட்ட 24 வருஷமா இங்கதான்‌ கடையை நடத்தி வருகிறோம்‌. நாங்க ஆரம்பிச்ச போது, இங்க பூங்கா எல்லாம் கிடையாது. வெறும் புதராக தான் இருந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் புதுபிக்கும் போது இதையும் புதுபிச்சாங்க. கடை போட ஆரம்பிச்ச போது, சுண்‌டல்‌, சமோசா மட்டும்‌தான்‌ விற்று வந்‌தோம்‌. அதன்‌பிறகு படிப்படியா கட்லட்‌, பானி பூரி, பாவ்‌பாஜின்னு கொடுக்க ஆரம்பிச்‌சோம்‌. இப்ப போண்டா, வடை, பஜ்ஜிக்‌ கூட போடுறோம்‌. நாங்க ஆந்திரா என்பதால்‌, இது போன்ற சாட்‌ உணவுகள்‌ எல்‌லாம்‌ தெரியாது. ஆனால்‌ இவரின்‌ அக்கா நல்லா சமைப்பாங்க. அவங்கதான்‌ எங்களுக்கு எல்‌லாமே சொல்லிக்‌கொடுத்தாங்க. எங்களுக்கு ஒரு வழி காண்பித்தது அவங்க தான். தள்ளு வண்டிக் கடையைப் பொருத்தவரை கடையை திறந்த அந்த நொடியில் இருந்து கடையை மூடும் நேரம் வரை நின்றுக் கொண்டு தான் இருக்கணும். கொஞ்சம் கூட உட்கார நேரம் இருக்காது. என் நாத்தனாரால் ரொம்ப நேரம் நிற்க முடிவதில்லை என்பதால் கடைக்கு அவங்க வரவில்லை. வீட்டு வேலைக்கு போயிட்டாங்க. நானும் என் கணவர் மட்டும் தான் கடையை முழுமையாக பார்த்துக் கொள்கிறோம்.” என்று கூறும்‌ சாரதாவும்‌ சமையல்‌ வேலைக்கும் செல்கிறார்‌. “எங்களுக்கு மூணு பொண்ணுங்க. நாங்க தான்‌இப்படி மழை, பனின்னு ரோட்டுல நின்னு கஷ்டப்படுறோம்‌. அவங்க இந்த கஷ்டம்‌படக்கூடாதுன்னு நானும்‌என்‌ கணவரும்‌ஆரம்பத்திலேயே முடிவு செய்‌திட்டோம்‌. நான் ஏழாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். என்‌ கணவரும்‌ பத்தாம்‌ வகுப்பு. அதனால எங்க பசங்கள நல்லா படிக்க வைக்கணும்ன்னு முடிவு செய்தோம்‌. அதை சாதித்தும்‌ இருக்கோம்ன்னு நினைக்கிறேன்‌. என்‌பெரிய மகள்‌பட்டப்படிப்பு முடிச்‌சிட்டு வங்கி ஒன்றில்‌வேலைப்‌பார்த்து வருகிறாள்‌. தொலைதூரக்‌கல்வியில்‌எம்‌.பி.ஏ படிச்சு முடிச்சிட்டா. இரண்டாவது மகளும் கல்லூரி படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போறா. கடைசி பெண்‌பள்ளியில் படிக்கிறா. இந்த கடை மாலை நேரம்‌, மட்டுமே என்பதால்‌, பசங்க படிப்பு எல்லாவற்றையும்‌ இந்த ஒரு வருமானத்தை கொண்டு சமாளிக்க முடியல. அதனால, நான்‌சமையல் ‌வேலைக்கு போக ஆரம்‌பிச்சேன்‌. காலை எட்டரை மணிக்கு கிளம்பினா பகல்‌மூன்று மணிக்கு தான் ‌நான் ‌வீட்டுக்கு வருவேன்‌. ஒரு வீட்டில்‌காலை மற்றும்‌மதிய சாப்பாடு செய்திடுவேன்‌. அதன்‌பிறகு இன்னொரு வீட்டில்‌ மதியம்‌ மற்றும்‌ இரவு சாப்பாடு. அதற்குள்‌என்‌கணவர்‌எல்லாவற்றையும்‌ தயார்‌ செய்து வைத்‌திடு வார்‌. சுண்டலை நான்‌வேக வச்சிட்டு போயிடுவேன்‌. அவர்‌அதை மசாலா போல்‌செய்திடுவார்‌. அதன்‌பிறகு பானிப்பூரிக்கு இரண்டு விதமான தண்ணீரும்‌ ரெடி செய்திடுவார். நான்‌வந்து சமோசா, வடைக்கு மாவு அரைப்‌பது, பஜ்ஜி, போண்டாவுக்கு தேவையானதை தயார்‌ செய்திடுவேன்‌. ஆறு மணிக்கு கடையை திறந்தால், கிளம்ப பத்து மணியாயிடும்‌. விற்பனை முடிச்சிட்டு எல்லாவற்றையும் கழுவி எடுத்து வச்சு கிளம்ப நேரமாயிடும். இது சாப்பாட்டு பொருள்‌ என்பதால்‌, எதையும் ‌நாங்க மறுநாள்‌ வரை வைத்திருப்பதில்லை. அன்றைக்கு செய்வதை அன்றே விற்றிடுவோம்‌. சில சமயம்‌ கொஞ்‌சம்‌ மீந்து போகும்‌. அதையும்‌ அங்குள்ள வாட்ச்மேன்‌, செக்யூரிட்டிக்கு கொடுத்திடுவோம்‌. ஆரம்பத்தில்‌இங்க எங்க கடையும்‌, மசாலா கடலை கடையும்‌தான்‌இருந்தது. இப்ப ஷவர்மா, மோமோஸ்‌, பணியாரம்‌, சூப்புன்னு… ஏகப்பட்ட கடை வந்திடுச்சு. ஆனா நமக்கான கஸ்டமர்கள் ‌என்றும்‌ குறைந்ததில்லை. நம்ம உணவின்‌சுவை பிடிச்சிருந்துச்சுன்னா அவங்க வேற எங்கேயும்‌ போகமாட்டாங்க. அப்படியே ஒரு நாள்‌மற்ற கடையில்‌சாப்பிட்டாலும்‌, அடுத்த நாள்‌நம்ம கடையை தேடித்தான்‌வராங்க. இதில் கிடைத்த வருமானம் கொண்டு தான் ஒரு நிலம் வாங்கி இருக்கோம். அதில் வீடு கட்டணும். நிறைய பேர் எவ்வளவு நாள் இப்படி தள்ளு வண்டியில் கடை போடுவீங்க. சின்னதா ஒரு இடம் பார்த்து அங்க கடை ஆரம்பிக்கலாமேன்னு கேட்டு இருக்காங்க. இதுநாள்‌ வரைக்‌கும்‌ அது பத்தி யோசிக்கல. கடைன்னா வாடகை அதிகமா இருக்கும்‌. அவ்வளவு வசதி எல்லாம் இல்லை. சொந்த வண்டி என்பதால்‌, வாடகை கிடையாது. இப்ப என்‌ இ‌‌ரண்டு பெண்களும் வேலைக்கு போறாங்க. எங்க உடம்பில் தெம்பு உள்ளவரை இந்த கடையை நடத்துவோம். அதன் பிறகு பார்க்கலாம்’’ என்றார் சாரதா. தொகுப்பு: – ப்ரியாசென்னா மசாலாதேவையானவைகொண்டைக் கடலை – ஒரு கப் உருளைக்கிழங்கு – 2 தயிர் – கால் கப் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தனியாத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 3 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு. தனியாக அரைக்க: வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 செய்முறை: சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.  உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.  அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.  அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும். அதில் தயிரை ஊற்றி கிளறவும்.  அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.  சுவையான சென்னா மசாலா ரெடி. …

The post எங்க வாழ்க்கைக்கான ஆதாரமே இந்த கடைதான்! appeared first on Dinakaran.

Tags : Anna Nagar Snack ,Anna Nagar Bogan Villa Park ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...