×

சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி

-(லிங்கோத்பவம்)

மகாசிவராத்திரி 11 - 3 - 2021, வியாழக்கிழமை

பா ர்வதி தேவி நம் பொருட்டு கௌதம மகரிஷியிடம் ஒரு கேள்வியை கேட்டாள். அதாவது,  இந்த பூவுலகில் மகாசிவராத்திரி என்கிறார்களே அது என்ன? அருணாசலம் என்கிற மலை வடிவ லிங்கம் உருவான தினம்தான் மகாசிவராத்திரி என்கிறார்களே அது குறித்து தாங்கள் விளக்கமாக கூறுங்களேன். எத்தனை முறை கேட்டாலும் கேட்கக் கேட்க நிறைய தத்துவ விஷயங்கள் என்னுள் சுரந்தபடி உள்ளன. எனவே, சற்றே விளக்கிச் சொல்லுங்கள்’’ என்று கேட்டவுடன், கௌதம மகரிஷி  இரு கண்களையும் மூடிக் கொண்டார்.

இதயம் முழுதும் அருணையின் மகாத்மியம் நிரம்பி வழிய, வாக்கினால் எப்படி அவனைப் பற்றி முழுதும் சொல்வேன் என்று தவித்தார். சொல்ல வேண்டும் என்ற ஆவலும், முழுதும் சொல்ல முடியுமா எனும் இயலாமையும், மிகப் பெரிய பாரத்தை என்னை சுமக்க வைத்து விட்டார்களே என்பதுபோல தேவியை நோக்கி வணங்கினார். தாங்களின் அருளாலேயே இதைச் சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். ஏதோ சொல்ல ஆரம்பித்தால்போதும் அருணாசலன் என் நாக்கில் வந்தமர்வான். தன்னைத் தானே உரைத்துக் கொண்டு போய்விடுவான் என்று ஆறுதல் அடைந்தார். மகரிஷிகளும், ஞானிகளும் எத்தனை அவஸ்தையுற்றிருப்பார்கள் என்று அந்தக் கணம் அவருக்குப் புரிந்தது.

கடலலை பின்னுக்கு மடிந்து உள்ளுக்குள் ஒடுங்குவதுபோல பெரு மூச்சை உள்ளிழுத்தார். மனம் நின்றது. வாக் தேவதைகள் திருநாவினில் வந்தமர்ந்தனர். அருணேசன் தன் சரித்திரத்தை மகரிஷி சொல்லப் போகிறார் என்றவுடன் சுடர்போல ஜொலித்தார். உள்ளுக்குள் தேஜோமயமாக ஜொலிக்கும் அப்பெருஞ்சுடரை பார்த்து கௌதமர் பேசத் தொடங்கினார். மனதற்ற தளத்திலிருந்து வரும் வாக்குகள் வேதம்போல தெறிக்கும்.

பார்வதிதேவி அதி கூர்மையானாள். முகம் முழுதும் பூரிப்பும், இத்தனை கிட்டத்தில் ஈசன் இருக்கிறாரா என்கிற ஒரு திகைப்பும் அவளை மகிழ்ச்சியில் முகிழ்த்தின. கௌதமரின் நாக்கு புரண்டெழுந்தது. அணிவகுத்து காத்திருந்த வாக் தேவதைகள் பிரித்துவிட்ட நெல்லிக்காய்களைப்போல சரசரவென வெளிவந்தனர். பார்வதி தேவியின் சித்த ஆகாசத்தில் பிரம்மனையும், விஷ்ணுவையும் நிறுத்தினார்.     

‘‘தத்துவ சிருஷ்டி எனப்படும் பிரபஞ்சத்தின் குண வேறுபாடுகளையும், இந்திரியங்களின் இயக்கத்தையும், ஒன்றுக்கொன்று எதிரெதிரான தேவதைகளையும் மகாவிஷ்ணு தானே உருவாக்கினார். பிரபஞ்ச சிருஷ்டியான தாவரங்கள், பறவை, விலங்குகள், மனிதர்கள் போன்றவற்றை பிரம்மா தானே உருவாக்கினார். பிறகு நான்கு முகங்களிலிருந்தும் நான்கு வேதங்கள் வெளிப்பட்டன. மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர் போன்ற ரிஷிகளும் வெளிப்பட்டனர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எதிலும் பற்றற்று பெருமாளையே தியானித்த வண்ணம் இருந்தனர். ஸ்வயம்புவ மனு என்று ஒருவரையும் படைத்தார். மனு வேறுயாருமல்ல மனித வர்க்கத்தின் முதல் பிரஜை. மனு என்பவன்தான் மனிதன், மனுஷன் என்றாயிற்று. எல்லா மொழிகளிலும் மனிதர்களை குறிக்க மனு எனும் வார்த்தையே மூலச் சொல்லாக அமைந்தது.     

பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.    தன்னைத்தானே பார்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல தன் வேலையைக் குறைத்துக் கொண்டான். தான் எப்படி, எப்படி என்று பலபேரிடம் கேட்டு மகிழ்ந்தான். ஆக்கல் எனும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு தான்தான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறோம் எனும் அகங்காரம் கிளைவிட்டது. அருகேயிருந்த விஷ்ணுவிடமும் தம் அகங்காரக் கிளையை படரவிட்டது.

‘‘உமக்கொன்று தெரியுமா நீர் என்னதான் உயிர்களை காத்தாலும், நான் சிருஷ்டிக்கவில்லையெனில் உமக்கே வேலையில்லை'' என கேலி பேசியது. ‘‘பிரம்மனே நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனை காக்க வேண்டாமா. அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா. உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு உமக்கென்ன வேலை இருக்கிறது. உன்னைப் படைத்ததே நான்தான். என்னைவிட நீ உயர்ந்தவனா.

நானே உன் குரு. இப்போது நீ இப்படிப் பேசுவதே நான் கொடுக்கும் சக்தியால்தான். அன்று ஈசன் உன்னுடைய ஐந்தாவது தலையை கிள்ளினாரே ஏதாவது செய்ய முடிந்ததா? என்னிலிருந்து வரும் என் தொழில்தான் உயர்ந்தது. இதிலிருந்தே நான் உயர்ந்தவன் என்பது வெளிப்படை'' என்று சிறுவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள். சொற்போராக இருந்தது ஆயுதப் போராக வளர்ந்தது. பெரும் படைகளோடு தயாராகினர். அப்போது அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. சட்டென்று நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் கக்கும் தூணாக ஈசன் அக்னியுருவில் வானையும், பூமியையும் ஊருடுவி சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள்.

எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெந்த வஸ்தும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞான மயமாக இருக்க வேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தன்னால்தானே என அஞ்ஞான மயமாக மயங்கிருப்பது பார்த்துதான் இப்படி அக்னி வடிவாக தோன்றினார். உலகில் வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவே இல்லை.

அருணாசலம் எனும் இத்தலத்தில் ஜோதி வடிவில் அக்னி ஸ்தம்பமான ஈசன் வெளிப்பட்டார். ஸ்தம்பத்திலிருந்து குரல் வெளிப்பட்டது. பிரமாண்டத்தைப் பிளந்து வெளிப்பட்டதால் அதி நீலமான ஆகாயம் மேலே கண்ணுக்குக் காணாமல் போனது. எல்லா திசைகளும் திடீரென ஜொலித்தன. காவிபோல சிவந்த ஒளியால் பூசப்பட்ட அவைகள் பூலோக சூரியனைபோலாயிற்று. ஜோதியின் சிவப்பால் உலகங்களின் தாவர ஜங்கமங்கள் யாவும் சிவந்த ஒளி வீசின.

அங்கு பெருஞ் சக்தியொன்று வானுக்கும் பூமிக்குமாக அக்னி ஸ்தம்பமாக நின்றது. பிரம்மாவும் விஷ்ணுவும் இதென்ன என்று சற்றே மிரண்டனர். ஆதி சிவன்... ஆதி சிவன்... என்று கைகூப்பினர். ஞானாக்னியான ஈசன் அவர்களை நோக்கி பேசத் தொடங்கினார்.மாபெரும் நிகழ்வொன்று யுகந்தோறும் நிலைத்து நிற்கப்போகிறது என்பதை அப்போது யாருக்கும் அங்கு தெரியவில்லை. பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களையும் விட மாபெரும் சக்தியொன்று பேசத் தொடங்குவதை உணர்ந்து பேச்சொடுங்கி நின்றனர். அவர்களுக்குள் விளங்கும் பரமாத்ம வஸ்துவான ஈசன், தானே அருணாசலமாக வெளியே லிங்க சொரூபமாக லிங்கோத்பவராக விண்ணுலகைத்தாண்டியும் மண்ணுலகை அகழ்ந்தும் பிரமாண்டமாக தகதகத்து ஜொலித்தது.   

பாதாள உலகத்தின் பாம்புகளெல்லாம் அந்த மலையின் சல்லி வேராக விரிந்திருந்தது. விண்ணைத் தாண்டி வானுலகை ஊடுருவி சென்று மறைந்திருந்தது. வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் அருணையின் செந்நிறச் சாயலை உற்றது. அக்னியின் செங்கதிர்கள் சமுத்திரங்களில் பரவி பொன்னை உருக்கி காய்ச்சியதுபோல ஒளிர்ந்தன. ஞானத்திரளாய் ஈசன் பிரமாண்டமாய் நின்றார்.

இப்பேற்பட்ட பிரமாண்டத்தை கண்ட பிரம்மாவும் விஷ்ணுவும் தனித்தனியே சிந்தித்தார்கள். இதென்ன ஆச்சரியம். நாகலோக மணிகளின் ஒளித்திரளின் வெளிப்பாடா இது. பன்னிரெண்டு ஆதித்யர்களும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கின்றனரா? என்ன விசித்திரமான சக்தி இது. வேறு எதையுமே அறிய முடியாத அளவுக்கு சகலத்தையும் மறைத்து தானே விழுங்கி இன்னதென்று அறியாதபடிக்கு இப்படி விருத்தியடைந்திருக்கிறதே? இது அக்னியே? ஆனாலும், தகிக்கவில்லை.

இதன் மூலம் எது? எதிலிருந்து இப்படி விருத்தியடைந்துள்ளது? எந்தச் சக்தியால் இப்படி விளங்குகின்றது? இதன் எல்லைகள் எதுவரை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன? அதல, சுதல, பாதாளம் நோக்கி என்னை போகத் தூண்டுகிறதே இது? ஆகாயம் தாண்டி முடிவுறாத வானத்தின் எல்லைக்கு பறக்கச் சொல்கிறதே என்று பிரம்மாவும், விஷ்ணுவும் தேடிக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று பெரும் ஆவலுற்றனர்.  இரு பெரும் அகந்தை எழுச்சிகளின் வடிவாகவே இங்கு பிரம்மாவும், விஷ்ணுவும் விளங்குகின்றனர்.

படைத்தல் எனும் செயலுக்கு கருவியே பிரம்மா. காத்தல் எனும் செயலுக்கு விஷ்ணுவே கருவியாகிறார். இவர்களைக் கொண்டு சர்வேஸ்வரனே அனைத்தையும் செய்கிறான். ஆனால், நான்தான் செய்கிறேன் எனும் அகந்தை உணர்ச்சி தோன்றும்போது ஈசனின் அளவிலா கருணை அருளாக கூடவே வருகிறது. அகந்தையை அறுக்க அதைவிட தன்னை வலிமை மிக்கதாக காட்டுகிறது. என்னை தெரிந்து கொண்டு விடுவாயா என்று சவால் விடுகிறது. ‘‘உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம். அதை நான் சொல்லலாமா’’ என்று அக்னி ஸ்தம்பத்திலிருந்து அசரீரியான ஈசன் கேட்டார்.          

‘‘ஆஹா... சிவனாரின் தீர்ப்புக்கு ஞாலமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்க மாட்டோமா என்ன’’ என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர்.
‘‘என் இந்த அக்னி ரூபமான ஜோதியின் உருவின் அடியையும், முடியையும் முதலில் யார் கண்டறிகிறார்களோ அவரே
உயர்ந்தவர்’’ என்றார்.ஒரு கணம் கூட யோசிக்காமல் இருவரும் சேர்ந்து, ‘‘ஆஹா... தாராளமாக. இன்னொரு விஷயம். இதை முதலில் காண்பவரே தலைவனாவான். இரண்டாமவர் அவருக்கு அடிமையாவார் என்று அவர்களுக்குள்ளேயே முடிவெடுத்தனர்.  

இறை, ஆத்மா, சச்சிதானந்தம், பிரம்மம் என்றெல்லாம் மிகுந்த உயர்வான எல்லாவற்றிற்கும் ஆதார வஸ்துவை சாதாரணமாக பார்த்து விடல் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். அதிலும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டுவிட்டு மீண்டும் திரும்புதல் என்பதே அறிவீனத்தின் உச்சம். எங்கிருந்து சகல படைப்புகளும் தொடங்குகிறதோ, படைப்புகள் அழிந்து மீண்டும் வெறும் வெளியாக பிரம்மம் மிச்சப்படும்போது இருக்கும் அந்த சக்தியை விளக்குவதற்கு யார் அங்கு இருப்பார்கள்.

அதிலிருந்து அதற்கு அன்னியமாக வேறொரு வஸ்து எது இருக்கப் போகிறது. இதை அறிவிக்கவே அவர்கள் இருவரும் தயாரானார்கள். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான அருணாசலம் எனும் பரமாத்மாவின் வடிவை எவராலும் அளக்க முடியாது. அருணாசலத்தின் மகிமை இவ்வளவுதான் என்று எவராலும் முழுவதும் உரைக்க முடியாது. அதன் சொரூபம் இன்னதுதான், இப்படிப் பட்டதுதான் என்று அறிய முடியாது.

பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தம்பமாக அருணாசலம் எனும் தலத்தில் பெருமானின் அடிமுடியை தேடிய வண்ணம் இருந்தனர். பிரம்மா ஹம்ஸ (அன்னப்) பறவையாக ஆகாயம் நோக்கி அக்னி ஸ்தம்பத்தின் மேலாகவும், திருமால் வராஹ (பன்றி) ரூபத்தோடு பூமியை அகழ்ந்து கொண்டும் சென்று இருவருமே முடிவில்லாத ஈசனின் சொரூபத்தை நோக்கி நகர்ந்தனர்.

ஒரு ஜீவன் ஈசனை அறிய சகல விதமான முயற்சிகளையும் செய்கிறது. சிறு பூஜையில் தொடங்கி ஹோமங்கள், கர்மாக்கள், யோகங்கள் என்று விதம்விதமான படித்துறைகள்போல அளவிலா முயற்சிகளில் ஈடுபடுகிறது. இவை அனைத்துமே அந்த ஜீவனின் சித்தத்தை சுத்தி செய்கிறது. நான்
தியானம் செய்கிறேன் என்று நினைப்பவரின் சித்தத்தை சுத்தி செய்கிறது.

பின்னர், தியானம் என்பதே சகலத்தையும் நிறுத்துவதற்குண்டான முயற்சியே ஆகும். அகங்காரம் தன்னுடைய இயலாத்தனத்தை ஒப்புக் கொள்ளவே இத்தனை சாதனங்கள் உள்ளன என்று ஒரு ஜீவன் புரிந்து கொள்கிறான். இறுதியில் தன்னையே சரணாகதி செய்கிறான். இறுதியில் நான் என்பது இந்த உடல் அளவுல்ல ஜீவனல்ல. நான் என்பதே அந்த ஆத்மாவே என்கிற பெரும் நிலைக்கு ஈசனின் அருள் உந்தித்தள்ளிக் கொண்டுச் செல்கிறது. அப்படித்தான் இங்கு பிரம்மாவிற்குள் பிரம்மமாய் நின்ற ஈசன் புரிய வைத்தார். வராகத்திற்குள் சத்திய வஸ்துவான சிவம் சீர்தூக்கி பார்க்க வைத்தார். அகங்காரம் தேடித் தேடி ஓயட்டும் என்று காத்திருந்தார்.

மகாவிஷ்ணு கீழே போகப் பன்னெடுங்காலம் கழிந்தது. அவரால் அடியை மட்டுமல்ல. அடியின் எந்தப் பாகத்தையும் காண முடியவில்லை. அவரின் வலிமை குன்றியது. அப்போதுதான் மெல்லியதாய் அகங்காரத்தினால் இது முடியாது என்கிற சத்வ குணம் மேலோங்கியது. அகங்காரம் தேயத் தொடங்கியது. தான் செய்த சபதத்தையே மறந்தார்.

தான் எங்கு தேடத் தொடங்கினோம் என்று திரும்பச் செல்லவும் வலிவற்று சிவனடியை நினைத்தபடி கிடந்தார். முயற்சி, முயற்சியற்ற நிலை என்கிற இரண்டையும் விட்டு தன்னையே நிவேதனமாக, தன்னையே ஈசனுக்காக அர்ப்பணித்தார். எதிர்பார்ப்பற்ற, இலக்கற்ற பக்தி அவருள்ளத்தில் உதித்தது. ஹரி பூமிக்கருகே வந்தார். பிரம்மாவின் சிறகுகள் சோர்ந்து போயின. கொஞ்ச நேரம் அகங்காரம் உயர்ந்தெழுந்துவிட்டு மீண்டும் அடங்கியது. தன்னால் இனி எதுவும் செய்ய இயலாது என்று பிரம்மாவும் ஓய்ந்தார்.

இந்த ஓய்தல் உடம்போ, மனதோ அல்ல நான் என்கிற அகங்காரம் இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்கிற ஓய்ச்சலேயாகும். பிரம்மா ஆரம்பத்தில் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தாலும், இறுதியில் சரணாகதி அடைந்தார்.

எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் எழுச்சியுறுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஏனெனில், ஒரு ஜீவன் தன்னுடைய இயல்பான ஆத்ம சொரூபமான நிலையிலிருந்து எழுந்து நான் இந்த உடம்பு என்று நினைக்கும்போதே ஆச்சரியமாக நீ எப்போதும் நான்தான். அதனால் மயங்காதே. நாம் இருவரும் வெவ்வேறு வஸ்துவல்ல. இந்த தோற்ற மயக்கம் கண்டு ஏமார்ந்து விடாதே என்று அகங்கார எழுச்சிக்கு இணையாக ஆத்மாவின் அருளும் உதவிக்கு வந்து விடுகிறது. அப்படி அருள் வடிவில் நம்மைப்போல் ஒரு உருவமாக எழுந்ததே அருணாசல மலையாகும்.

ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெந்த வஸ்தும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞான மயமாக இருக்க வேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தன்னால்தானே இந்த உலக வியாபாரம் நடைபெறுகிறது என்று அஞ்ஞான மயமாக மயங்கிருப்பது பார்த்துதான் இப்படி அக்னி வடிவாக தோன்றினார். உலகில் வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவே இல்லை. அருணாசலம் எனும் இத்தலத்தில் ஜோதி வடிவில் அக்னி ஸ்தம்பமான ஈசன் வெளிப்பட்டார்.

அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும் நமக்கு காட்டுவது என்னவெனில் தேடல் நின்று போகவேண்டும். அகங்காரம் தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது இறைக்காட்சி கிடைக்கிறது. ஏனெனில், எதனால் இந்த அகங்காரமான ஜடப் பொருள் இயங்குகிறதோ, இயக்குவிக்கப்படுகிறதோ அதை அறிவது என்பது அகங்காரம் அடங்கிப் போகும்போது சித்திக்கிறது. முயற்சியற்ற இடத்தில் சகல வஸ்துக்களின் மூலச் சக்தி தெளிவாகத் தெரிகிறது.

இங்கு பிரம்மாவும் விஷ்ணுவும் செய்த முயற்சி என்பதே முயற்சியற்ற நிலைக்கு அகங்காரம் தள்ளப்படுவதற்கேயொழிய அகங்காரத்தால் ஆத்மாவின் இருப்பை அறிய முடியாது. ஏனெனில், வந்துபோகும் குமிழிபோலத்தான் அகங்காரமே தவிர, ஆத்மாவைப்போல நிரந்தர இருப்பானது அகங்காரத்திற்கு கிடையாது. இன்னும் ஒரு முக்கிய விஷயம் தேடுபவன் தன்னை விட்டு விட்டு தனக்குள் ஆழ்ந்து செல்லாமல் வெளி விஷயங்களில் தேடும்போது எதையும் அறிய இயலாமல் போகிறது.

அடைவேன், பிடித்துவிடுவேன் என்று அகங்காரம் எழும்போதே ஆத்மாவை விட்டு வெகுதூரம் விலகிவிடுகிறது. என்ன செய்திருக்க வேண்டுமெனில் அடைய வேண்டுமென்கிற முயற்சி ரூபத்திலுள்ள அகங்காரத்தை கரைத்து தன்னால் அதை அறிய முடியாது என்று சரணாகதி செய்திருக்க வேண்டும். அந்த நெருக்கடிக்குத்தான் பிரம்மாவும், விஷ்ணுவும் தள்ளப்பட்டனர்.

சிவ ஸ்தம்பமாகவும், செஞ்சிவப்பான அக்னி ஸ்தம்பாகவும் நின்ற அந்த சொரூபம் கருணையின் பொருட்டு குளிர்ந்து அடங்கியது. பிரம்மாவும் விஷ்ணுவும் அதைத் துதித்து தங்களின் அகங்காரத்தை இழந்து தாங்கள் யார் என்று உணர்ந்தனர். பிரம்மாண்டமான லிங்கமாக நின்ற ஈசனைத் துதித்தனர். அப்படி லிங்கம் உத்பவமாகி நின்ற இரவே மகாசிவராத்திரி ஆகும்.

கிருஷ்ணா

Tags : Mahasivarathri ,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு கிராம கோயில்களில் குலதெய்வ வழிபாடு