×

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?எமது குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டா? கடன்கள் அடையுமா? வம்சம் விருத்தி ஆகுமா?
- ஜெயபால், சேலம்

தங்களுடைய விரிவான கடிதம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி மிகவும் கஷ்டப்பட்டுள்ளீர்கள். தங்களுக்கு ராகு தசையில் சனி புத்தி நடக்கிறது. உங்களுக்கு ப்ரஸ்னம் பார்த்ததில் வந்திருக்கும் லக்னம் கும்பம். தற்போதைய காலகட்டத்தில் உங்கள் குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் உங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்கும். இனி கடன்கள் அடையும்.

உங்கள் வீட்டினுடைய அமைப்பில் எந்தத் தோஷமும் இல்லை. வாஸ்து தோஷங்களும் இல்லை. உங்கள் முதல் மகன் மற்றும் மருமகளின் ஜாதகத்தைப் பார்த்தோம். இருவருக்கும் தோஷம் இல்லை. முதல் மகனின் ஜாதகப்படி ஏப்ரல் 2021க்குப் பிறகு அருமையான ஆண் வாரிசு உண்டு. பரிகாரங்கள் ஏதும் தேவையில்லை. இரண்டாவது மகனின் ஜாதகத்தையும் அனுப்பி வைத்துள்ளீர்கள். அவரது ஜாதகப்படி சூரியன் - செவ்வாய் - சனி ஆகிய கிரகங்கள் பலமாக உள்ளது. கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும். இரண்டாவது மகனுக்கு அரசு வேலை கிடைப்பதற்கு தினமும் பைரவர் வழிபாட்டினை மேற்கொள்வது நன்மை தரும்.

?என்னுடைய எதிர்காலம் எப்படி?
- சென்னை வாசகி, பெசன்ட்நகர்.

உங்கள் கடிதத்தில் நீங்கள் மகம் நட்சத்திரம் என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், நீங்கள் கொடுத்த தேதிப்படி நீங்கள் பிறந்தது தை மாதம் - சுவாதி நட்சத்திரம் - துலா ராசி - ரிஷப லக்னம் - ரோகினி சாரம். உங்களுக்கு தற்போது சுக்கிர தசை ராகு புத்தி நடக்கிறது. ப்ரஸ்னப்படி உங்களுக்கு மகர லக்னம் வந்திருக்கிறது. உங்கள் ஜாதகப்படி  பார்க்கும்போது வாழ்க்கையில் மிக அதிகமான சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்துள்ளீர்கள். ஏமாற்றங்களை மட்டுமே வாழ்க்கையில் பார்த்திருக்கிறீர்கள். தற்போது உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு நேரம் சரியில்லாமல் இருக்கிறது. முடிந்தவரை தனியாக இருப்பதை தவிருங்கள். வெளியூர் பயணங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாதாமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மரை வழிபாடு செய்து வாருங்கள். மன உறுதி அதிகரிக்கும்.

?எமது மகளின் எதிர்காலம் சொல்வது என்ன? எப்போது திருமணம் நடைபெறும்?
- பழனி, பாண்டி.

உங்கள் மகள் பிறந்தது புரட்டாசி மாதம் - விசாகம் நட்சத்திரம் - விருச்சிக ராசி - ரிஷப லக்னம் - ரோகினி 2ம் பாதம். தற்போது அவருக்கு புதன் தசையில் சுக்கிர புத்தி நடக்கிறது. மிகவும் அனுகூலமான காலம் பிறந்திருக்கிறது. திருமண வேளை வந்து விட்டது. வரும் பையன் சொந்தமில்லை - அசல்தான். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

சந்தான ப்ராப்தி உண்டு. வரும் பையன் ஒரே பையனாக இருக்க மாட்டான். உடன் பிறந்தோர் உண்டு. நல்ல கல்வி - கை நிறைய சம்பளத்துடன் கூடிய பையனாக வருவான். கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து பையன் வருவான். உங்கள் மகளினுடைய நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். ஒரு முறை கஞ்சனூர் சென்று சுக்கிரப் ப்ரீதி செய்து வாருங்கள். வீட்டினில் ஒருமுறை 108 தாமரை மலர்களால் சூக்த ஹோமம் செய்யவும். நல்லதே நடக்கும்.

?எமது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தோஷங்கள் ஏதும் உள்ளதா?
- S.M. பாண்டி.

உங்கள் புதல்வன் பிறந்தது ஐப்பசி மாதம் - பூசம் நட்சத்திரம் - கடக ராசி - விருச்சிக லக்னம் - கேட்டை 3ம் பாதம். கேது தசையில் சந்திர புத்தி நடக்கிறது. திருமணம் சம்பந்தமான முயற்சிகள் எடுக்கும் சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண வேளை வந்து விட்டது. ஏப்ரல் - செப்டம்பருக்குள் திருமணம் முடிவாகி விடும். வரும் பெண் சொந்தமில்லை அசல். உடன் பிறந்தோர் உண்டு.

ஒரே துறையை சார்ந்த பெண்ணே அமையும். சந்தான விருத்தி உண்டு. ஏழுக்குடைய சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால் களத்திர தோஷம் என சொல்லியிருக்கலாம். ஆனால் குருவுடன் இணைந்திருப்பதால் கவலை கொள்ள வேண்டாம். ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று அபிஷேகம் செய்து விட்டு வரவும். வீட்டினில் ஒரு முறை ஷோடச மகாலட்சுமி பூஜை செய்யவும். சொந்தமாக க்ளினிக் வைக்கவும் வாய்ப்பு ஏற்படும். வாழ்த்துக்கள்.

?எமது மகனுக்கு உடல்நிலை எப்போது சரியாகும்? பரிகாரம் ஏதும் உண்டா?
-    V.D. பண்ருட்டி

உங்கள் மகன் பிறந்தது ஆவணி மாதம் பூசம் நட்சத்திரம் கடக ராசி. ரிஷப லக்னம் - கிருத்திகை சாரம். தற்போது அவருக்கு புதன் தசையில் சனி புத்தி நடக்கிறது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு தற்போது உங்கள் மகனுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. எனவே தைரியமாக இருங்கள். இனி வரும் காலகட்டங்களில் தங்கள் மகனுக்கு உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் பெறும். தற்போதுள்ள சூழலில் ஆவணி மாதத்திற்குப் பிறகு சொந்த வீடு அமையும். இடம் வாங்கி வீடு கட்டுவதை விட வீடாகவே வாங்குவது நன்மை தரும்.

நிச்சயமாக சொந்த வீடு அமைப்பு அவருக்கு உண்டு. ஒருமுறை ஈரோட்டிற்கு அருகேயுள்ள குச்சனூர் சென்று சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யவும். தடைகள் அகல அடிக்கடி சிவன் ஆலயத்திற்குச் சென்று வரவும். அன்னதானம் இயன்ற வரை செய்யவும். நல்லதே நடக்கும்.

?நான் அனுப்பி இருக்கும் இரண்டு ஜாதகங்களும் பொருந்தி இருக்கிறதா?
- V.S. கடலூர் மாவட்டம்

நீங்கள் அனுப்பியுள்ள ஜாதக விபரம்: பெண்: மார்கழி மாதம் - கிருத்திகை - மேஷ ராசி - கடக லக்னம் - பூசம் சாரம். ஆண்: ஆடி மாதம் - மகம் - சிம்ம ராசி-கும்ப லக்னம் - சதயம் சாரம். மாப்பிள்ளைக்கு தற்போது சூர்ய தசை - சனி புத்தி நடக்கிறது. பெண்ணிற்கு ராகு தசையில் குரு புத்தி நடக்கிறது. நட்சத்திரப் பொருத்தம் 10க்கு ஏழு உள்ளது. முக்கியமாக தாலிப் பொருத்தம் நன்றாக உள்ளது. லக்னம் சஷ்டாஷ்டமாக இருந்தாலும் அனுகூல சஷ்டாஷ்டகமாக உள்ளதால் தாராளமாக பொருத்தம் உண்டு. பாவ ஸாம்யத்தை எடுத்துக் கொண்டால் பெண்ணிற்கு அதிக பாவம் உள்ளது. ஆனால், வித்தியாசம் 1 பாவ அளவிற்கு உள்ளது. எனவே, தாராளமாக செய்யலாம். 8ல் சனி இருப்பதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். இருவருக்குமே சனி கும்பத்தில் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆயுசு - ஆரோக்கியம் தீர்க்கம். சந்தான விருத்தி உண்டு.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Tags :
× RELATED அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்