×

சனி தரும் அனுபவக் கனி

* ஏழரைச் சனி வாழ்வின் போக்கையே மாற்றிவிடுமா என்ன?

ஆமாம். காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப் பூர்வமாகப் பேச வைக்கிறது. ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும்.

‘‘ரெண்டு மார்க் கூட எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும்.. இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார் சனி பகவான். சனிபகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். தன்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார்.

* எனக்கு ஏழரைச் சனியா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும்.

‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பல விதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்வர்.

* குழந்தைப் பருவத்தில் ஏழரைச் சனியின் தாக்கம் எப்படியிருக்கும்?

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்துநீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும்.

தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளை எப்படி பாதிக்கும்?

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். ‘‘அடங்காதே... அலட்சியப்படுத்து’’ என்றுதான் இருப்பார்கள். பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவைத்தான் ஏற்றி வைப்பார். தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்ளையை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான்.

‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா'' என்றால்,  ‘‘எங்கயோ இருக்கற சாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா’’ என்பார்கள். ஆனால், இடறும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் ‘‘சும்மா ஒரு ஜாலிக்குத்தான் அப்படி பண்ணினேன்’’ என்று ஏழரையில் பல வினைகளை கொண்டு வருவார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக்கூடாது. தனக்கு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள்.

* என்னதான் செய்வது?

குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணினா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும். ‘‘நீ படிக்கிறியோ இல்லையோ. வாராவாரம் அந்தக் கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற ஸ்லோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரியவன் வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

மேலும், வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடித்த மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரிசுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்கமாட்டார். அமைதியாக இருந்தால் வேலைபார்த்த நிறுவனத்தையே விலைபேசும் நிலைக்கு உயர்த்துவார்.

* அடுத்ததாக இரண்டாவது சுற்றைப்பற்றி சொல்லுங்களேன்?

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல் பாதுகாத்தல் பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர். கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒன்னுமே இல்லாத ஓட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ‘‘ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்.’’

‘‘ ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தானே சில பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா’’ என்று தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். பழைய நிலைக்கே கொண்டு செல்ல திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததை வாபஸ் வாங்க தயங்க மாட்டார்.

எதுவும் இல்லாதபோது இருந்த வீரமெல்லாம் எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’’ என்றே தட்டிக் கேட்க முடியாமலும், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் தெரியாமல் தத்தளிக்க வைத்து ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனா, ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது. என்னை தப்பா நினைச்சிட்டா’’ என்று தயங்குவீர்கள்.

* இரண்டாவது சுற்றில் வளர்ச்சி எப்படியிருக்கும்?

இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். தவறான வாய்ப்புகள் கிடைத்தால் மாறக் கூடாது. ‘‘ஸார்.. நம்ம பிராண்டுக்கு மார்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளி கேட்டையும் நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘மறுவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். அவன் கொடுத்த ஐடியாவுல பணம் பண்னேன். இப்போ அம்போன்னு நிக்கறேன்’’ என்பீர்கள். மேலும், ‘‘வளர்த்த கெடா மார்ல பாயறது மாதிரி என்னையே மாட்டியும் விடறான்’’ என்று புலம்புவீர்கள்.

நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர்.செல்வந்தர். இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். மேலும், ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் எதுஎதுவோ சாப்பிடும்போது தயிர் சாதத்தோடு அமைதியாக இருங்கள். எல்லாவற்றிலும் எல்லை தாண்டக் கூடாது. எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால், பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்குசனி நல்ல பலன்களை கொடுக்கும்.

* மூன்றாவது சுற்றைப்பற்றி சொல்லுங்களேன்?

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். தன்னுடைய அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னை தாழ்த்தி உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் தான்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது.

வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக்கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் வீட்டை அலுவலகமாக பார்க்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மா ஆகலாம். ஆசைகளைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

* ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகமும் பயமும் வருகிறதே?  

ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல. சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். தடுக்கி விழுந்த குழந்தையை தூக்கி விடுவதைப்போல மனிதர்களை ஆங்காங்கு கோயில்களில் வீற்றிருக்கும் இறைவன் தூக்கி நிறுத்துகிறார். ‘‘என்னைப் பார்த்து பயப்படாதீர்கள். நான் எத்தனை கருணைமிக்கவன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்’’ என்கிற விதமாக சனி பகவான் பல்வேறு தலங்களில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தலங்களுக்கெல்லாம் சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீருகிறது பாருங்கள். ‘‘முட்ட முட்டப் பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ’’ என்கிறாள் ஔவைப்பாட்டி. மிகவும் கடுமையான பஞ்சமாக இருந்தாலும், பிரச்னைகள் துரத்தினாலும் நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு ஈசனுடையது என்பதை நெஞ்சமே நீ மறக்காதே என்கிறாள். எனவே, எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சர்வேஸ்வரனை சரணாகதி செய்வோம்.

Tags : Saturn ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு