×

விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் ஆகியவை நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டார். இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பாலிஸ்டிரின் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.மேலும் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி, கூவம் (ஈசா ஏரி) மப்பேடு திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோடை குளம் சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை,காந்திரோடு குளம், திருத்தணி,வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகமாசத்திரம், குளம், புலிகாட் ஏரி, திருப்பாலைவனம், ஏழுகண்பாலம், கும்மிடிப்பூண்டி, பங்கிக்காம் கால்வாய், காக்களுர் ஏரி, திருவள்ளுர், சீமாவரம் கொசஸ்தலை ஆறு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். …

The post விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்; கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Viegar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...