×

கேந்திராதிபத்ய தோஷம் உண்டா? : என்ன சொல்கிறது என் ஜாதகம்?

?73 வயதாகும் நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து குடும்பத்தில் நல்ல சுப காரியங்கள் செய்து சொந்த வீட்டில் இறைவனுக்கு தொண்டு செய்து காலத்தை கழிக்கிறேன். எதிலும் குறைவில்லை. தந்தை வழியில் பெற வேண்டிய பொருள் எனக்கு எப்போது கிடைக்கும்? அதனைப் பெற்று யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்துவிடவும் வாழ்க்கை சுபமாக முடியவும் வாய்ப்பு கிடைக்குமா? ஆயுள் எத்தனை வருடம்?
- ஈரோடு வாசகர்.

ஆயுளைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு. அதை எந்த மனித சக்தியாலும் தீர்மானிக்க இயலாது. நீங்கள் அனுப்பியிருக்கும் குறிப்புகளைக் கொண்டு ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. பூர்வீக சொத்துக்களைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவக அதிபதி சந்திரன் ஜென்ம லக்னத்திலேயே நீசம் பெற்றுள்ளார். என்றாலும் தற்போது சந்திர தசையின் காலம் நடந்து வருவதால் பெற்றோர் வழியில் வரவேண்டிய பொருள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. 27.12.2020 முதல் அதற்கான வாய்ப்பு உருவாகக் காண்பீர்கள்.

அதுமுதல் நீங்கள் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கலாம். உங்களது தீவிர முயற்சியின் பேரில் மட்டுமே அந்த பொருளானது வந்து சேரும். 27.06.2022 வாக்கில் உங்களால் அந்தப் பொருளை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்க இயலும். அதுவரை பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

77 வயது முடிந்து 78வது வயது நடக்கும்போது உடல்நிலையில் அதிக கவனம் கொள்ளவேண்டியது அவசியம். இறைதொண்டு செய்பவர்களுக்கு வாழ்வின் அந்திமக் காலம் என்பது நல்ல முறையிலேயே அமையும். வீண் குழப்பத்திற்கு ஆளாகாமல் இறைபணியில் கவனத்தை செலுத்துங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.

?என் மருமகன் சொந்தமாக தொழில் செய்து வீடு, கார், மனை எல்லாம் வாங்கினார். இவை அனைத்தும் புதன் தசையில் நடைபெற்றது. தற்போது கேது தசை நடந்து வரும் நிலையில் தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகமாகிறது. அடுத்த வருகிற சுக்கிர தசை எவ்வாறு
அமையும்? கேந்திராதிபத்ய தோஷம் உண்டா?
 - துரைராசன், திண்டுக்கல்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது கேது தசை நடந்து வருவதால் தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற கூற்று உண்மையே. பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம், கும்ப ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகப்படி தற்போது கேது தசையில் குரு புக்தியின் காலம் நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து நான்கில் அமர்ந்துள்ளனர்.

புதன் தசையின் காலம் எந்த அளவிற்கு வளர்ச்சியைக் கண்டாரோ அதைவிட அதிகமான வளர்ச்சியை சுக்கிர தசையின் காலத்திலும் காண இயலும். தற்போது எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேதுவின் தசை நடப்பதால் தேவையற்ற மருத்துவ செலவுகளையும் வளர்ச்சியில் தடையையும் சந்தித்து வருகிறார்.

28.09.2022 முதல் துவங்க உள்ள கேது தசையில் புதன் புக்தியின் காலத்திலேயே அவரது முன்னேற்றத்தைக் காணத் துவங்கிவிடுவீர்கள். கேந்திராதிபத்ய தோஷத்தால் பெரியதொரு தாக்கம் ஏதும் நேராது. நான்காம் வீடாகிய சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதும், சுக்கிரன் தனது சுயசாரத்தில் சஞ்சரிக்கும் நிலையில் தசையை நடத்த உள்ளதும் பலமான நிலையே ஆகும். சுக்கிர தசையின் காலத்தில் உங்கள் மருமகன் அபார வளர்ச்சியைக் காண்பார் என்பதையே அவரது ஜாதகம் உரைக்கிறது.

?முப்பத்தாறு வயதாகும் என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? ராகுகால பரிகார பூஜை, சர்ப்ப சாந்தி, வாழைமரகல்யாணம் என எத்தனையோ பரிகாரம் செய்துவிட்டோம். இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவனது தொழிலில் மாற்றம் வருமா?
திருமணம் எப்பொழுது நடைபெறும்?
- செந்தாமரை, வேலூர்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் களத்ர தோஷம் காணப்படுவதால் திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் உண்டாகியிருக்கிறது.

நீங்கள் அனுப்பியிருக்கும் குறிப்பினைக் கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் சதய நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் அவர் பிறந்திருக்கிறார் என்பதும் தற்போது சனி தசையில் ராகு புக்தியின் காலம் முடிவுறும் தருவாயில் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.

வருகின்ற 27.02.2021 முதல் குருபுக்தியின் காலம் துவங்குவதால் அந்த நேரத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மூன்றில் அமர்ந்தாலும் உடன் குரு இணைவதாலும் தற்போது குருபுக்தியின் காலம் துவங்க உள்ளதாலும் வரும் வருடத்தில் திருமணம் நடக்கும் என்று நம்பலாம். தற்போதைய சூழலில் அவருடைய தொழிலில் மாற்றம் உண்டாவதற்கான வாய்ப்பு இல்லை.

திருமணம் முடிந்து குழந்தை பிறந்த உடன் தொழிலில் மாற்றத்தினை சந்திக்க இயலும். தற்போது செய்து வரும் ஓட்டுநர் தொழிலை அடிப்படையாகக் கொண்டு காய்கறி அல்லது பழங்கள் வியாபாரம் செய்யும் தொழில் அமையும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரத்தினகிரி சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து மகனின் திருமணத்திற்காக மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகனின் திருமணத்தை ஸ்வாமி சந்நதியிலேயே நடத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். 27.02.2021ற்குப் பின் உங்கள் மகனின் திருமணம் நடந்துவிடும் என்பதையே அவரது ஜாதகத்தின் பலனாக அமைந்திருக்கிறது.

?21வது வயது முதல் தொடர்ந்து என் குலத்தொழிலை செய்து கொண்டிருக்கிறேன். எப்படி கடன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. வட்டிக்கு வட்டி பணம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். மனைவி மற்றும் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது கடன் எப்பொழுது முழுமையாக அடைபடும்? தொழில் எப்பொழுது மேன்மையடையும்?
- தாமரைக் கண்ணன், அருப்புக்கோட்டை.

குலத்தொழில் என்பது நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும். அதே நேரத்தில் நீங்கள் குலத்தொழிலோடு சேர்த்து மற்றொரு தொழிலையும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகக் குறிப்பினைக் கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதும் தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது என்பதும் தெளிவாகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தற்போது நடந்து வரும் நேரமே மற்றொரு தொழிலையும் சேர்த்துச் செய்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

அவ்வாறு உங்களை நாடி வரும் தொழிலைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்யுங்கள். உங்கள் கடன் பிரச்னைகளைத் தீர்க்கும் அளவிற்கான சம்பாத்தியத்தை ராகு நிச்சயமாகத் தருவார். ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கும் குருவும் உடன் இணைந்திருக்கும் மாந்தியும் உங்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதோடு ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாயும் வக்ரம் பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்து நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வளர்ச்சி காண இயலாமல் அவதிப்பட்டு வருகிறீர்கள்.

குலத்தொழில் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் பலன் கிடைக்காது. குலத்தொழில் என்பது இந்த சமூகத்தில் உங்களுக்கான அடையாளம். அதே நேரத்தில் காலமாற்றத்தையும், காலத்திற்கு ஏற்றவாறு நமது தேவைகள் அதிகரித்திருப்பதையும் புரிந்துகொண்டு உங்களை நாடி வரும் மற்றொரு தொழிலையும் சேர்த்துப் பார்க்கத் துவங்குங்கள். நிச்சயமாக மனைவி மற்றும் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதோடு உங்கள் கடன் பிரச்னையும் முடிவிற்குக் கொண்டு வர உங்களால் இயலும். 2022ம் ஆண்டின் பிற்பாதியில் உங்கள் பிரச்னைகள்
அத்தனையும் தீர்ந்துவிடும் என்பதையே உங்கள் ஜாதகம் சொல்கிறது.

?எனக்கு வேலை கிடைக்குமா? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. என் உடல்நிலை சரியாகுமா? என் குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்வார்களா?
 - சாருலதா, ஆவடி.

உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்வது என்பது அவர்களது ஜாதகத்தைப் பொறுத்தது. உங்கள் ஜாதகத்தைக் கொண்டு அவர்களின் கல்வி நிலை குறித்தும் உத்யோகம் குறித்தும் துல்லியமாகச் சொல்ல இயலாது. அதே நேரத்தில் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னாதிபதி சனியுடன் இணைந்து ஏழில் அமர்ந்திருப்பதால் எதிர்காலத்தில் நிச்சயமாக நல்ல நிலையில் வாழ்வார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் உத்திரட்டாதி நட்சத்திரம் (ரேவதி நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் உத்யோகத்திற்குச் செல்லும் அமைப்பு என்பது அத்தனை உசிதமாக அமையவில்லை. தற்போது நடந்து வரும் சுக்கிர தசையில் புதன் புக்தியின் காலம் கூட சுயதொழில் செய்வதற்கோ அல்லது வேலை கிடைப்பதற்கோ அத்தனை சாதகமாக அமையவில்லை.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல்நிலையை விட மனநிலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூன்றாம் வீட்டில் உண்டாகியிருக்கும் சந்திரன் - கேதுவின் இணைவு உங்களது மனதில் தேவையற்ற சந்தேகங்களை விதைக்கும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற உங்களது குணம் தான் வளர்ச்சியைத் தடை செய்து வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

மனநிலை என்பது நன்றாக இருந்தாலே உடல்நிலையும் நல்லபடியாக அமையும். நீங்கள் உங்கள் குடும்பத்தினரை கவனித்துக் கொள்வதில் ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வாருங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து தருவதே உங்களது பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாம் நல்லபடியாக அமையும்.

சுபஸ்ரீ சங்கரன்

Tags : horoscope ,
× RELATED ஸ்ரீ ராமனின் ஜாதகம் சொல்லும் உண்மைகள்-ஸ்ரீ ராம நவமி