
சென்னை: கடந்த 2009ல் வெளியான ‘வைகை’ என்ற படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை சுவாசிகா விஜய் (33). தமிழில் ‘லப்பர் பந்து’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில் ‘அட்ட கத்தி’ தினேஷ் மனைவி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்த அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது சூரி நடிக்கும் ‘மாமன்’, நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ ஆகிய படங்களில் நடித்து வரும் சுவாசிகா விஜய், ‘மாமன்’ படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நிறைய இணையதளங்களில், சூர்யா படத்தில் நான் நடித்தபோது விபத்தில் சிக்கினேன் என்று தகவல் வெளியிட்டுள்ளனர். அது தவறு. ‘மாமன்’ படத்தில் நடித்த எனக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்’ என்றார்.
