×

திருச்சி, மணப்பாறையில் பலத்த மழை: அரியாறு கரை உடைப்பு: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மேட்டூர் அணை நிரம்பியது. அணைக்கு வந்த நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.  திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டது. இதனால் அந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில், காவிரி ஆற்றில் வரும் உபரிநீர் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், திருச்சி நவலூர் குட்டப்பட்டில் பிரிந்து அரியாற்றில் செல்லும் உபரி நீர் புங்கனூர் கலிங்கியில் வழிந்து, வயல்வெளியில் பாய்ந்து வருகிறது.இந்நிலையில் இனியானூர் அருகில் நாச்சிக்குறிச்சியில் வர்மாநகர் செல்லும் அரியாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, அந்த பகுதியை தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் கரையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரியாற்றங்கரையில் ஆக்ரமிப்புகள் உள்ளதால், அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  தெரிவித்தனர்.இதற்கிடையே அரியாற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும், தண்ணீர் வழிந்தோடிய பகுதியையும் கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு, உடைப்பை உடனடியாகச் சரிசெய்திட நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ஜோதி, ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தற்போது உடைப்பு சரிசெய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை  வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமமடைந்தனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மணப்பாறை பகுதியில் நேற்றிரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மணப்பாறை பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கி இருந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன….

The post திருச்சி, மணப்பாறையில் பலத்த மழை: அரியாறு கரை உடைப்பு: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Maniparam ,Iriyaram ,Mattur dam ,Karnataka ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்